சயனைடு நிரப்பிய 2 ஆர்.டி.எக்ஸ் குண்டுகள் வெடிக்கும்.. சென்னை ஐகோர்ட்டுக்கு வந்த வெடிகுண்டு மிரட்டல்
சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சயனைடு நிரப்பிய இரண்டு ஆர்.டி.எக்ஸ் குண்டுகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வெடிக்கும் என தலைமைப் பதிவாளருக்கு மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.
இன்று சென்னை உயர் நீதிமன்ற பதிவாளருக்கு வந்த இமெயிலில், சயனைடு நிரப்பிய இரண்டு ஆர்.டி.எக்ஸ். குண்டுகள் பிற்பகல் 12.45 சென்னை உயர் நீதிமன்றத்தில் வெடிக்கும் என மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. அதனால் இஸ்லாமியர்கள் முன்னதாகவே நீதிமன்றத்தில் இருந்து வெளியேற வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை மேற்கொண்டனர். மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு சோதனை கருவிகளுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் சோதனை நடத்தினர். தலைமை நீதிபதி அறை, வாகன நிறுத்தம், பொருட்கள் பாதுகாப்பறை உள்ளிட்ட நீதிமன்ற வளாகம் முழுவதும் சோதனை நடத்தினர்.
சோதனையின் முடிவில் எந்தவித வெடிப்பொருட்களும் கண்டறியப்படவில்லை. இதையடுத்து மிரட்டல் புரளி என தெரியவந்தது. சென்னை உயர் நீதிமன்றத்திற்கு 7 வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த வெடிகுண்டு மிரட்டல் காரணமாக உயர்நீதிமன்றத்தில் இன்று வழக்கு விசாரணை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. ஐகோர்ட் தலைமை பதிவாளருக்கு இ-மெயில் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் யார் என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நேற்று, திருப்பூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற அலுவலகத்திற்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக போலீசார் மோப்ப நாய் மற்றும் நிபுணர் குழுவுடன் நீதிமன்ற வளாகத்தில் தீவிர சோதனை நடத்தினர். சோதனையில் வெடிகுண்டு எதுவும் கண்டறியப்படாததால், இந்த மிரட்டல் ஒரு புரளி என தெரியவந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications