சென்னை பப்ளிக் ஸ்கூல், டிஏவி உள்ளிட்ட தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்! பதற்றத்தில் பெற்றோர்
சென்னை: சென்னையில் பல்வேறு தனியார் பள்ளிகளுக்கு ஒரே நேரத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள நிலையில் அந்த பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை பப்ளிக் பள்ளி, கோபாலபுரம் டிஏவி பள்ளி, கே.கே. நகர் பத்ம சேஷாத்ரி, பாரிமுனையில் செயிண்ட் மேரீஸ் பள்ளி, கீழ்ப்பாக்கம் பவன்ஸ் வித்யாஸ்ரம் ஆகிய பள்ளிகளின் ஈமெயில்களுக்கு சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடிக்கவுள்ளதாக மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

ஒரே ஐபி முகவரியில் இருந்து மேற்கண்ட பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த பள்ளிகளில் உள்ள மாணவர்களை பெற்றோர் அழைத்து செல்லுமாறு எஸ்எம்எஸ், வாட்ஸ் ஆப், போன் மூலம் கேட்டுக் கொண்டனர்.
வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சம்பந்தப்பட்ட பள்ளிகளில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. வெடிகுண்டை செயலிழக்கும் நிபுணர்கள் வந்து சோதனை செய்யப்படுகிறது. அது போல் முகப்பேர், திருமழிசை, அண்ணாநகர் ஆகிய 3 இடங்களில் ஒரே நிர்வாகத்தின் கீழ் இயங்கி வருகிறது சென்னை பப்ளிக் ஸ்கூல்.
இந்த பள்ளியின் 3 கிளைகளிலும் வெடிகுண்டு மிரட்டல் அவர்களின் ஈமெயில் முகவரிக்கு வந்துள்ளது. அது போல் ஓட்டேரியில் உள்ள தனியார் பள்ளியிலும், ஆர்ஏ புரத்தில் உள்ள செட்டிநாடு வித்யாஸ்ரம் பள்ளியிலும், பெரம்பூர், பூந்தமல்லி, எழும்பூர் ஆகிய இடங்களில் இயங்கும் சனா ஸ்மார்ட் பள்ளிகளிலும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதன் எதிரொலியாக தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
இதையடுத்து பெற்றோர் மேற்கண்ட பள்ளிகளுக்கு வந்து பிள்ளைகளை அழைத்து செல்கிறார்கள். வேலைக்கு செல்லும் பெற்றோராக இருந்தால் சில பள்ளி நிர்வாகமே தங்களது வாகனங்களில் மாணவர்களை பள்ளி பாதுகாவலர்களுடன் அனுப்பி வைக்கப்படுகிறார்கள். இந்த வெடிகுண்டு மிரட்டல் யாரோ அச்சுறுத்துவதற்காகவே விடுத்துள்ளனர். எனவே பொதுமக்களும் பெற்றோரும் அச்சமும் பீதியும் அடைய வேண்டாம். மாணவர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என காவல் துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர். இந்த பள்ளிகள் இருக்கும் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
சென்னையில் மொத்தம் 7 தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் கிடைத்தன. இந்த செய்தியை தொலைகாட்சியில் பார்க்கும் மற்ற பள்ளிகளின் பெற்றோர் அது போல் மற்ற தனியார் பள்ளிகளுக்கு பெற்றோர் போன் போட்டு வெடிகுண்டு மிரட்டல் குறித்து கேட்டு வருகிறார்கள். சில பெற்றோர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படாத பள்ளிகளுக்கும் நேரடியாக சென்றுள்ளனர். இதனால் பதற்றம் எழுந்துள்ளது.பாரிமுனையில் உள்ள செயிண்ட் மேரீஸ் பள்ளியில் வெடிகுண்டு ஏதும் இல்லை என தெரிகிறது. [email protected] என்ற இமெயிலில் இருந்துதான் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இந்த நபரை தேடி தனிப்படைகள் தேடி வருகிறார்கள். இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட நபரை பிடித்துவிடுவோம் என கூறி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications