அண்ணா பல்கலைக்கழகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்.. பரபரத்த சென்னை! புரளி கிளப்பிய நபருக்கு வலைவீச்சு!
சென்னை: சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்திற்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய் உதவியுடன் சோதனை செய்ததில் புரளி என தெரியவந்துள்ளது.
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கின் எப்.ஐ.ஆர் கசிந்து மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கைத் தாமாக முன்வந்து விசாரித்த நிலையில், 3 பெண் ஐ.பி.எஸ் அதிகாரிகள் கொண்ட சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரிக்க உத்தரவிட்டது. அதன்படி, அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது.
இந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்திற்கு எதிராக பல்வேறு அரசியல் கட்சிகளும் போராட்டங்கள் நடத்தி வருகின்றன. இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து மோப்ப நாய் உதவியுடன் போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் வெடிகுண்டு எதுவும் கண்டுபிடிக்கப்படாத நிலையில், அந்த மிரட்டல் புரளி என்பது தெரிய வந்தது.
இது தொடர்பாக கோட்டூர்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வெடிகுண்டு இருப்பதாக புரளி கிளப்பி பதற்றத்தை ஏற்படுத்திய நபரை பிடிக்க போலீசார் வலைவீசி வருகின்றனர்.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி, மாநிலம் முழுவதும் அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், அண்ணா பல்கலைக்கழகத்திற்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications