"வெடிகுண்டுடன் ஒருவர் இருக்கிறார்" சென்னை டூ துபாய் விமானத்திற்கு வந்த மிரட்டல்.. விசாரணையில் திடுக்
சென்னை: சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து, இன்று காலை துபாய்க்கு புறப்பட இருந்த விமானத்திற்கு, மர்ம நபர் ஒருவர் திடீரென வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. வெறும் மிரட்டல் என தெரிய வந்ததையடுத்து, விமானப் பயணிகள் நிம்மதியடைந்தனர்.
சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள சர்வதேச விமான நிலையம், தலைநகர் டெல்லி மற்றும் மும்பைக்கு அடுத்தபடியாக மிக அதிக அளவு சரக்குகளைக் கையாளும் தளமாகவும், மிக அதிகமான பயணிகள் வந்து செல்லும் தளமாகவும் விளங்குகிறது. 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விமானப் பயணிகள் நாள்தோறும் வந்து செல்கின்றனர். சுமார் 400 முதல் 500 வரையிலான விமானங்களும் வந்து போகின்றன.

இந்நிலையில், சென்னையில் இருந்து இன்று காலை 7.35 மணிக்கு துபாய் செல்ல இருந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், சென்னை சர்வதேச விமான நிலையத்திலிருந்து 174 பயணிகளுடன் புறப்பட தயாராக இருந்தது. அப்போது, சென்னை மாநகர போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு மர்ம தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் துபாய் செல்லவிருக்கும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில், வெடி குண்டுடன் ஒருவர் பயணிக்கிறார் என்று ஒரு ஆண் குரல் பேசிவிட்டு இணைப்பு துண்டிக்கப்பட்டது.
இதனையடுத்து, சென்னை விமான நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, உடனடியாக விமான நிலைய பாதுகாப்பு படையினர், வெடிகுண்டு நிபுணர்களும் தீவிரமாக சோதனையிட்டனர். விமானத்திலிருந்த 167 பயணிகளையும் சோதனையிட்டனர். ஆனால் வெடிகுண்டு எதுவும் இல்லை என்று தெரிய வந்தது.
இதை அடுத்து சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த அந்த செல்போன் எண்ணை ஆய்வு செய்தபோது, அது சென்னை மணலியில் உள்ள ஒரு நபர் பேசியது தெரிந்தது. இதை அடுத்து சென்னை மாநகர போலீஸ், அவரை சுத்தி வளைத்து பிடித்து விசாரணை நடத்தினர்.
அப்போது அவருடைய தங்கையும், தங்கை கணவரும் இன்று அந்த விமானத்தில் துபாய் செல்ல இருக்கின்றனர். ஆனால் இவர்களுக்குள் ஏதோ குடும்பப் பிரச்சனை இருப்பதால், அந்த பிரச்சனை காரணமாக வெடிகுண்டு இருப்பதாக வதந்தியை பரப்பியதாக தெரிய வந்தது. இதனையடுத்து, அந்த மணலியைச் சேர்ந்த அந்த நபரை சென்னை மாநகர போலீசார் கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் விமான பயணிகள் அச்சமடைந்தனர்.
சென்னை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல் காரணமாக துபாய் செல்ல வேண்டிய இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானம் தாமதமாக இன்று காலை 11 மணிக்கு புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் விமான நிலையத்தில் விமானம் புறப்பட தயாராக இருந்த நிலையில், விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவத்தால் விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications