நடுவானில் பறந்த விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்.. சென்னை விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கம்
சென்னை: மும்பையில் இருந்து 182 பேருடன் தாய்லாந்து சென்று கொண்டிருந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக வந் தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அந்த விமானம் அவசர அவசரமாக சென்னை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது. விமானத்தை சோதனை செய்த நிலையில் விமானத்திற்குள் சந்தேகப்படும்படியான எந்தப் பொருளும் இல்லாததால் இது வழக்கமாக வந்துள்ள புரளி என்பது தெரியவந்துள்ளது.
நாட்டில் சமீபகாலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. பள்ளிகள், கல்லூரி, மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள், அரசு அலுவலகங்கள், தலைமைச் செயலகம், ரயில், விமான நிலையங்கள் என அனைத்துப் பகுதிகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

காவல் துறை, அதிகாரிகள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வரும் நிலையிலும், இதுபோன்ற மிரட்டல்களைக் கட்டுப்படுத்துவதில் தொடர் பிரச்சனை இருந்து வருகிறது. இந்நிலையில், மும்பையில் இருந்து தாய்லாந்துக்கு நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், சென்னை விமான நிலையத்தில் அவசர அவசரமாக தரையிறக்கம் செய்யப்பட்டுள்ளது.
மும்பையில் இருந்து தாய்லாந்துக்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்டுள்ளது. இந்த விமானத்தில் 182 பேர் பயணம் செய்துள்ளனர். நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்த நிலையில், வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, சென்னை விமான நிலையத்தில் இண்டிகோ விமானம் அவசர அவசரமா தரையிறக்கப்பட்டது.
விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் அவசரமாக கீழே இறக்கப்பட்டு விமான நிலைய ஓய்வறைகளில் தங்க வைக்கப்பட்டனர். சென்னை விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள், வெடிகுண்டு நிபுணர்கள், அதிரடி படையினர் உள்ளிட்டோர் விமானத்தில் தீவிர சோதனைகள் மேற்கொண்டனர். ஆனால், விமானத்துக்குள் சந்தேகப்படும்படியான பொருட்கள் எதுவும் சிக்கவில்லை. இதைத்தொடர்ந்து, இது வழக்கமான புரளி என்பது தெரியவந்துள்ளது.
இருப்பினும், அசாம்பாவிதங்களைத் தடுக்கும் வகையில் தொடர்ந்து விமானத்தில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விமானம் முழுவதுமான பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பிறகு சென்னையில் இருந்து தாய்லாந்து நாட்டுக்கு விமானம் புறப்பட்டுச் செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மும்பை விமான நிலையத்திற்கு வந்த ஒரு மர்ம நபர் மிரட்டல் விடுத்துள்ளது தெரியவந்துள்ளது.
அந்த நபர் பேசுகையில், தாய்லாந்து புறப்பட்ட விமானத்தின் கழிவறைக்குள் சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், அந்த விமானம் நடுவானில் வெடித்து சிதறவுள்ளதாகவும் கூறிவிட்டு இணைப்பத் துண்டித்துள்ளார். இச்சம்பவத்தால் சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications