தமிழகத்தில் பூஸ்டர் டோஸ் போடும் பணி.. முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!
சென்னை: தமிழகத்தில் பூஸ்டர் டோஸ் செலுத்தும் பணி முதல்வர் ஸ்டாலின் தலைமையில் பட்டினப்பாக்கத்தில் தொடங்கியது. தமிழகத்தில் இன்று மட்டும் 4 லட்சம் பேர் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட்டுக் கொள்கிறார்கள்.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. அது போல் ஓமிக்ரான் பாதிப்பும் அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்த இரு தவணை தடுப்பூசிகளால் முடியாது என்பதால் மூன்றாவது தவணை எனப்படும் பூஸ்டர் டோஸ் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
இதையடுத்து கடந்த கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது 15 வயது முதல் 18 வயதிற்குட்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் ஜனவரி 3 ஆம் தேதியும் பூஸ்டர் டோஸ் போடும் பணிகள் ஜனவரி 10 ஆம் தேதியும் நடைபெறும் என அறிவித்தார்.
அதன்படி கடந்த 3ஆம் தேதி 15 - 18 வயது பிரிவினருக்கு இந்தியாவில் தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கின. அந்த வகையில் இன்றைய தினம் பூஸ்டர் டோஸ் பணிகள் தொடங்குகின்றன. இதற்காக நேற்று முன் தினம் முதல் கோவின் செயலியில் பதிவுகள் தொடங்கின.
முன்பதிவு வேண்டாம்.. நாளை மறுநாள் முதல்.. பூஸ்டர் தடுப்பூசி யாரெல்லாம் போட்டுக்கொள்ளலாம் தெரியுமா?
இந்தியாவில் 60 வயதுக்கு மேற்பட்டோர் மட்டும் 13.75 கோடி பேர் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் பூஸ்டர் டோஸ் செலுத்தப்படவுள்ளது. பூஸ்டர் டோஸ் செலுத்த வருவோர் 2 ஆவது தடுப்பூசி செலுத்தி 9 மாதங்கள் நிறைவடைந்திருக்க வேண்டும். கோவின் தளத்தில் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், முன்கள பணியாளர்கள், இணை நோய் உள்ளவர்கள் பூஸ்டர் டோஸுக்கு பதிவு செய்யலாம்.
ஏற்கெனவே 2 தடுப்பூசி செலுத்தியவர்கள் ஒரு முறை தங்கள் பதிவை முன்னெச்சரிக்கை டோஸ் பிரிவில் பதிவு செய்தால் போதுமானது. ஏற்கெனவே 2 தடுப்பூசிகளை போட்டுக் கொண்ட 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மருத்துவரிடம் எந்த சான்றையும் பெற தேவையில்லை.
இந்த நிலையில் தமிழகத்திலும் பூஸ்டர் டோஸ் செலுத்தும் பணிகள் இன்று தொடங்கின. தமிழகத்தில் இதுவரை 8.83 கோடி பேர் தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டனர். இதில் முதல் தவணை செலுத்தியவர்களின் எண்ணிக்கை 87.35 சதவீதமாகும். 2ஆவது தவணை தடுப்பூசி செலுத்தியவர்களின் எண்ணிக்கை 61.46 சதவீதமாகும்.
இந்த நிலையில் தமிழகத்தில் பூஸ்டர் தடுப்பூசி போடும் பணிகள் சென்னை பட்டினப்பாக்கம் எம்.ஆர்.சி. நகரில் உள்ள இமேஜ் ஆடிட்டோரியத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது. தமிழகத்தில் 35.46 லட்சம் பேர் தடுப்பூசி போடுவதற்கு தகுதியானவர்களாக உள்ளனர்.
இதில் 9.78 லட்சம் பேர் முன்கள பணியாளர்கள். 5.65 லட்சம் பேர் சுகாதாரப் பணியாளர்கள். 20.03 லட்சம் பேர் இணை நோயாளிகள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள். அந்த வகையில் 4 லட்சம் பேர் இன்று பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொள்கிறார்கள்.