அதெப்படி அப்படி பேசலாம்.. கோபத்தில் இளைஞரின் விரலைக் கடித்து துப்பிய ‘குடி’மகன் தலைமறைவு
சென்னையை அடுத்த புழலில் குடிபோதையில் ஒருவரின் விரலை கடித்து துப்பிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னை: சென்னையை அடுத்த புழல் அருகே குடிபோதையில் ஏற்பட்ட தகராறின் போது விரலை நீட்டி பேசிய நபரின் கட்டை விரலை கடித்து பற்களை உடைத்த குடிமகனைப் போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னையை அடுத்த புழல் அருகே உள்ள காவாங்கரை மகாவீர் கார்டன் பகுதியில் வசித்து வருபவர் பிரதீப் ( 38 ). இவர் நேற்றிரவு மதுபோதையில் தனது வீட்டின் அருகே தனது நண்பர் முனுசாமி என்பவருடன் பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியே சென்ற அதே பகுதியை சேர்ந்த கோபி( 27 ) என்பவருக்கு பிரதீப்புக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது. வாய் வார்த்தைகளில் ஆரம்பித்த சண்டை கைகலப்பாக மாறியது. இருவரும் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக் கொண்டனர்.
தனது முகத்திற்கு நேராக ஆள்காட்டி விரலை நீட்டி பிரதீப் பேசியதால் கடும் கோபமடைந்த கோபி, பிரதீப்பின் முகத்தில் கடுமையாக தாக்கினார். இதில் பிரதீப்பின் பற்கள் உடைந்து வாயில் இருந்து ரத்தம் கொட்டியது. அப்போதும் ஆத்திரம் தீராத கோபி, பிரதீப்பின் வலது கை ஆள்காட்டி விரலையும் கடித்து துப்பினார் .
இதனால் பலத்த காயமடைந்த பிரதீப் வலியில் அலறி துடித்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து ரத்த காயங்களுடன் இருந்த பிரதீபை ஆம்புலன்ஸ் மூலம் தனியார் மருத்துவமனையில் அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக அவர் அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே பிரதீப் அளித்த புகாரின் பேரில், புழல் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து விரலை கடித்து துப்பிய கோபி தலைமறைவாகிவிட்டார். அவரது சகோதரர்களான சத்யநாராயணன் , பிரேம் விஸ்வரூபன் ,உறவினர் கௌரிசங்கர் ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். தலைமறைவான கோபியை போலீசார் தேடி வருகின்றனர் .












Click it and Unblock the Notifications