சார் சைக்கிள் கேட்டிருந்தேனே.. என்னாச்சு சார்.. உதயநிதி ஸ்டாலினிடம் மிக உரிமையாய் கேட்ட சிறுவன்!
சென்னை: உதயநிதி ஸ்டாலினிடம் சிறுவன் ஒருவன் மிக உரிமையாய் சைக்கிள் கேட்ட நிலையில் அதை வாங்கிக் கொடுப்பதாக உறுதியளித்துள்ளார்.
தன்னிடம் சைக்கிள் கேட்ட சிறுவன் அப்துல்லாவை, பெயர் முகவரி உள்ளிட்ட விவரங்களுடன் தனது அலுவலகத்துக்கு சென்று பார்க்குமாறு கூறி உதயநிதி அனுப்பி வைத்தார்.
தனது தொகுதி எம்.எல்.ஏ. என்ற முறையில் உதயநிதியிடம் மிக உரிமையாய் சிறுவன் அப்துல்லா சைக்கிள் கேட்டிருக்கிறார்.

உதயநிதி ஸ்டாலின்
சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி பகுதியில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரிசி, பிரட், போர்வை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வழங்கினார் உதயநிதி ஸ்டாலின். இந்த நிகழ்ச்சியை முடித்துவிட்டு கார் ஏறி புறப்பட்ட அவரிடம் சிறுவன் ஒருவன் மிக உரிமையாய் அருகில் சென்று 'சார் சைக்கிள் கேட்டிருந்தேனே.. இன்னும் கிடைக்கல.. ' என முறையிட்டான். மேலும், தனது விவரங்களை எல்லாம் ஏற்கனவே கொடுத்திருப்பதாக கூறினான்.

அலுவலகம் செல்
இதனைக் கேட்ட உதயநிதி ஸ்டாலின், சரி எனது அலுவலகம் சென்று பாரு எனக் கூறினார். அப்போதும் அந்த சிறுவன் அங்கிருந்து நகர்வது போல் தெரியவில்லை. இதையடுத்து தம்பி உன் பெயர் என்ன என உதயநிதி ஸ்டாலின் கேட்டார், அதற்கு பதிலளித்த அந்தச் சிறுவன், பாஷா.. மாணிக்பாஷா என ரஜினிகாந்த் ஸ்டைலில் அப்துல்லா.. சையது அப்துல்லா.. என தனது பெயரை கூறினான். இதையடுத்து அங்கிருந்தவர்கள் தம்பி அலுவலகம் போய் பாருப்பா, சைக்கிள் கிடைக்கும் எனக் கூறி நம்பிக்கை அளித்தனர்.

மூதாட்டி முறையீடு
ஒரு வழியாக சிறுவனின் சைக்கிள் பஞ்சாயத்தை முடித்து அங்கிருந்து புறப்பட முயன்ற உதயநிதி ஸ்டாலினிடம் மூதாட்டி ஒருவர் ஏதோ ஒரு கோரிக்கையை வைத்து அதை கொஞ்சம் பார்த்து பண்ணிக் கொடுப்பா என முறையிட்டார். அவரது விவரத்தையும் சேகரித்துக் கொண்ட உதயநிதி, நடவடிக்கை எடுப்பதாக கூறி அங்கிருந்து கிளம்பினார்.

மிக உரிமையாக
உதயநிதி ஸ்டாலினிடம் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி மக்கள் மிக உரிமையாக பேசுவதும், கேட்பதும் இங்கு கவனிக்க வேண்டிய ஒன்றாகும். சென்னையில் இருந்தால் தொகுதி பிரச்சனைகள் தொடர்பான ஆலோசனை கூட்டங்களை அவர் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications