ஆர்.எஸ். பாரதியை கண்டித்து பிராமணர் சங்கத்தினர் கண்டன போராட்டம்.. எஸ்வி சேகர் கடும் தாக்கு
சென்னை: பிராமணர்களை பற்றி தரக்குறைவாகப் பேசிய ஆர்.எஸ்.பாரதியை எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யக்கோரி குடியரத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு கடிதம் அனுப்ப வேண்டும் என பிராமணர்கள் சங்க கூட்டத்தில் எஸ்வி சேகர் வலியுறுத்தினார்..
கடந்த பிப்ரவரி 14-ம் தேதி சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுகவின் இளைஞரணி அலுவலகம்ன அன்பகத்தில் கலைஞர் வாசகர்வட்டக் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் திமுகவின் அமைப்புச் செயலாளரும், ராஜ்யசபா எம்பியுமான ஆர்.எஸ்.பாரதி கலந்து கொண்டார். அப்போது அவர் பிராமண சமுதாயத்தைச் சேர்ந்தவர்களையும், பத்திரிகைகளையும் தரக்குறைவாக விமர்சித்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதேபோல் பாஜக.வின் எச்.ராஜாவையும் அவர் கடுமையாக விமர்சித்து இருந்தார்.

ஆர்எஸ் பாரதியின் இந்த பேச்சுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அமைச்சர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தார்கள். அதன்பின்னர் ஆர்எஸ் பாரதி தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்தார்.
இந்நிலையில் திமுக, திகவின் பிராமண எதிர்ப்பு பிரச்சாரங்களை கண்டித்து நங்கநல்லூரியில் பிராமண சங்கங்கள் சார்பில், நேற்று பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில . நடிகர் எஸ்.வி.சேகர், பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி, ராஷ்ட்ரீய சனாதன சேவா சங்க நிறுவன தலைவர் எஸ்.ராமநாதன், உலக பிராமணர்கள் நல்வாழ்வு சங்க நிறுவன தலைவர் கே.சிவநாராயணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் இந்துக்களுக்கும், இந்துக்களின் அங்கமாக விளங்கும் பிராமணர்களுக்கும் எதிராக பேசுபவர்களை கண்டிக்க வேண்டும் என்று வலியுறுத்தி தீர்மானிக்கப்பட்டது. பிராமணர்களுக்கு எதிராக கருத்துக்களை வெளியிடும் ஊடகத்தினரை கண்டிக்க வேண்டும், பிராமணர்களை எதிர்ப்பவர்களை அரசியலில் இருந்து காணாமல் போக செய்ய வேண்டும் என்று கூட்டத்தில் பங்கேற்றவர்கள் வலியுறுத்தினர்.
இக்கூட்டத்தில் எஸ்.வி.சேகர் பேசுகையில், ''அரசியல் சாசன சட்டத்தின்படி வாழ்பவர்கள் பிராமணர்கள். சாதி, மதகலவரம் தூண்டுபவர்கள் நாங்கள் அல்ல. அரசியல் சாசன சட்டத்துக்கு எதிராக நடந்துகொண்ட ஆர்.எஸ்.பாரதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக நாம் அனைவரும் ஜனாதிபதி, பிரதமர், உள்துறை அமைச்சர், நீதிபதிகள் உள்ளிட்டவர்களுக்கு கடிதம் அனுப்பவேண்டும். இனிவரும் தேர்தலில் திமுகவுக்கு வாக்களிக்க மாட்டோம் என உறுதியேற்க வேண்டும்'' இவ்வாறு கூறினார்.
பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி பேசுகையில், ''ஆர்.எஸ்.பாரதி பேசியது அவரது சொந்தக் கருத்து அல்ல, அது திமுகவின் கருத்து. ஆகவே ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும்'' என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications