தமிழகத்தில் ஒருவருக்கு பிரிட்டன் உருமாறிய கொரோனா உறுதி - சென்னையில் தனி அறையில் சிகிச்சை
சென்னை : பிரிட்டனில் இருந்து தமிழகம் திரும்பிய ஒருவருக்கு உருமாறிய கொரோனா பரவியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
உருமாறிய கொரோனா உறுதியான நபருக்கு சென்னை கிங்ஸ் இன்டிடியூட்டில் தனி அறையில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
Recommended Video

பிரிட்டனில் இருந்து இந்தியா திரும்பியுள்ள ஆறு பேருக்கு உருமாறிய கொரோனா பரவியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ள நிலையில் அந்த ஆறுபேரில் ஒருவர் தமிழகத்தைச் சேர்ந்தவர் என்று தகவல் வெளியாகியுள்ளது.

நவம்பர் 25ம் தேதி முதல் டிசம்பர் 23ம் தேதிவரை பிரிட்டனிலிருந்து இந்தியாவுக்கு சுமார் 33 ஆயிரம் பேர் திரும்பியுள்ளனர். பிரிட்டனிலிருந்து திரும்பியவர்களிடம் இருந்து மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. பிரிட்டனில் இருந்து இந்தியா திரும்பியுள்ள 33,000 பேரில் 114 பேருக்கு பாதிப்பு உறுதியான நிலையில் அதில் 6 பேருக்கு உருமாறிய கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உருமாறிய கொரோனா உறுதியான 6 பேர், அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா உறுதியானவர்களின் மாதிரி புனே மையத்திற்கு அனுப்பப்பட்டிருந்தது. புனே மையத்திற்கு அனுப்பட்ட மாதிரிகளில் ஒருவருக்கு கொரோனா இருப்பது உறுதியானது. பெங்களூரு மையத்தில் சோதனை செய்யப்பட்ட மாதிரிகளில் 3 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. ஹைதராபாத் மையத்தில் சோதனை மாதிரிகளில் 2 பேருக்கு உருமாறிய கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது.
பிரிட்டனில் இருந்து தமிழகம் திரும்பியவர்களில் 17 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அனைவரின் மாதிரிகளும் புனே ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதில் ஒருவருக்கு உருமாறிய கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், பிரிட்டனில் இருந்து தமிழகம் வந்தவர்களில் இதுவரை 17 பேருக்கு கொரோனா உறுதி செய்யபட்டுள்ள நிலையில் ஒருவருக்கு மட்டும் உருமாறிய கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
உருமாறிய கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நபர் சென்னை கிண்டி கிங்ஸ் இன்ஸ்டிட்யூட்டில் அனுமதிக்கப்பட்டு தனி அறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார். உருமாறிய கொரோனா தொற்று உறுதியான நபருடன் தொடர்பில் இருந்த 15 பேருக்கு கொரோனா இல்லை என முடிவு வந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
தமிழகத்தில் உருமாறிய கொரோனா பரவும் வாய்ப்பு குறைவாகவே உள்ளது எனவே யாரும் பயப்பட தேவையில்லை. பிரிட்டனில் இருந்து வந்த 30 பேரின் மாதிரியை புனே ஆய்வகத்திற்கு அனுப்பியுள்ளோம். வெளிநாட்டில் இருந்து வருபவர்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் என பேட்டியில் தெரிவித்தார். மேலும் அவர்களை கண்காணிக்க தனிகுழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications