ஆம்ஸ்ட்ராங் கொலையில் திடீர் திருப்பம்.. பிரபல ரவுடி சம்போ செந்திலை தேடும் போலீஸ்! என்ன மேட்டர்
சென்னை: பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு விசாரணையில் பல திடுக் திருப்பங்கள் நடந்து வருகிறது. இந்த கொலை வழக்கில் இப்போது வரை மொத்தம் 14 பேர் செய்யப்பட்டுள்ள நிலையில், இப்போது போலீசார் பிரபல ரவுடி சம்போ செந்தில் என்பவரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
கடந்த ஜூலை 5ம் தேதி பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் சென்னை பெரம்பூரில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் அவரது வீட்டின் அருகே வைத்து வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

தேசிய கட்சியின் மாநில தலைவர் பதவியில் இருக்கும் ஒருவர் தலைநகர் சென்னையில் வைத்து படுகொலை செய்யப்பட்டது மாநிலம் முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின.
11 பேர் கைது: இந்த கொலை வழக்கு சம்பவம் தொடர்பாக முதலில் 11 பேரைக் கைது செய்த செம்பியம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். இதில் திருவேங்கடம் என்பவர் தனது இருப்பிடத்தில் பதுக்கி வைத்திருந்த ஆயுதங்களைப் பறிமுதல் செய்ய போலீசார் அழைத்துச் சென்ற போது அவர் போலீசாரை துப்பாக்கியால் சுட முயன்றதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அவரை போலீசார் என்கவுண்டர் செய்தனர்.
இதையடுத்து 10 பேரைக் காவலில் எடுத்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். அதில் பல முக்கிய தகவல்கள் தெரிய வந்தது. குறிப்பாக இந்த சம்பவத்தில் கொலையாளிகளிடம் ஒரு கோடி ரூபாய் வரை கைமாறி இருக்கிறது. மேலும், அவர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில், திமுக நிர்வாகி மகன் சதீஷ், அதிமுகவின் மலர்க்கொடி, தமாகாவை சேர்ந்த ஹரிஹரன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இந்தச் சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பைக் கிளப்பியது.
திடீர் திருப்பம்: இத்துடன் கைது முடிந்துவிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கைதான ஹரிஹரன் அளித்த தகவல் திடீர் திருப்பமாக அமைந்துள்ளது. அவர் அளித்த தகவல் அடிப்படையில் இப்போது போலீசார் பிரபல ரவுடி சம்போ செந்தில் என்பவரைத் தேடி வருகின்றனர். செந்தில் பணம் ஹரிஹரன் மூலமாகவே அருளுக்கு சென்றுள்ளது. இந்த பணம் தான் வேறு சிலருக்கும் அனுப்பப்பட்டுள்ளது. ஹரிஹரன் மூலமாகவே அருள் மற்றும் பொன்னை பாலு கும்பல் ஆம்ஸ்ட்ராங் படுகொலை சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கிறது.












Click it and Unblock the Notifications