நிலம் வாங்குவோருக்கு சூப்பர் செய்தி! இனி வெறும் 2% தான் "பதிவு கட்டணம்!" அமைச்சர் பிடிஆர் அறிவிப்பு
நிலம் வாங்குவோரின் சுமையை குறைக்க பதிவுக்கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது
சென்னை: நிலம் வாங்குவோரின் சுமையைக் குறைக்கும் வகையில் இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் அமைச்சர் நிதியமைச்சர் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்
மூன்றாவது முறையாக 2023-24 பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று தாக்கல் செய்தார். இதில் பெண்களுக்கு உரிமை தொகை மற்றும் பல முக்கிய அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தமிழ்நாட்டில் காகிதம் இல்லாத பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதேபோல இந்தாண்டும் காகிதமில்லா பட்ஜெட் தாக்கலானது. காலை 10 மணிக்கு நிதியமைச்சர் பிடிஆர் தனது பட்ஜெட் உரையை வாசிக்கத் தொடங்கினார்..

வீடு வீங்குவோர்
குறிப்பாக வீடு வாங்குவோருக்கு அட்டகாசமான ஒரு அறிவிப்பை அமைச்சர் பிடிஆர் வெளியிட்டார். நிலம் வாங்குவோரின் சுமையைக் குறைக்கப் பதிவு கட்டணத்தை 4ல் இருந்து 2% ஆக குறைக்க அரசு முடிவு என்று அமைச்சர் நிதியமைச்சர் அறிவித்தார். அதன்படி இனிமேல் வழிகாட்டு மதிப்பில் 5% முத்திரைத் தீர்வை, சொத்து மாற்று வரி, 2% பதிவுக் கட்டணம் 2% செலுத்த வேண்டும். இது எளிய, நடுத்தர மக்களுக்குக் குறிப்பாக வங்கிக் கடன் மூலம் வீடு வாங்குவோருக்கு இது பெரிதும் பலனளிக்கும் என்றும் அமைச்சர் பிடிஆர் தெரிவித்தார்.

அமைச்சர் பிடிஆர்
இது குறித்து அமைச்சர் பிடிஆர் கூறுகையில், "01.04.2012 அன்று உயர்த்தப்பட்ட நிலத்தின் வழிகாட்டி மதிப்பு, 09.06.2017 அன்று முதல் ஒரே சீராக 33 சதவீதம் குறைக்கப்பட்டது. மேலும், விற்பனை, நன்கொடை, பரிமாற்றம் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே அல்லாத ஏற்பாடு ஆவணங்களுக்கான பதிவுக் கட்டணம் ஒரு சதவீதத்திலிருந்து நான்கு சதவீதமாக உயர்த்தப்பட்டது.

கால அவகாசம் தேவை
சந்தை மதிப்பிற்கு ஏற்ப வழிகாட்டி மதிப்பை உயர்த்தவும், பதிவுக் கட்டணத்தைக் குறைக்கவும் பல்வேறு தரப்பினரிடமிருந்து தொடர்ந்து கோரிக்கைகள் வந்த வண்ணம் உள்ளன. இந்த கோரிக்கைகளை ஏற்று, வழிகாட்டி மதிப்பில் திருத்தத்தைப் பரிந்துரைக்க ஒரு குழுவை அரசு அமைத்துள்ளது. இக்குழு நில அளவை எண் வாரியாக திருத்தம் மேற்கொள்ளக் கால அவகாசம் தேவைப்படும்.

பதிவு கட்டணம் குறைப்பு
ஆகவே, வெளிச்சந்தையில் சொத்துகளின் மதிப்பு கணிசமாக அதிகரித்துள்ளதால், இக்குழுவின் அறிக்கை பெறும்வரை, வழிகாட்டி மதிப்பை 08.06.2017 வரை கடைப்பிடிக்கப்பட்டு வந்த வழிகாட்டி மதிப்பிற்கு ஈடாக உயர்த்த அரசு முடிவு செய்துள்ளது. நிலம் வாங்குபவர்களின் சுமையைக் குறைக்க, பதிவு கட்டணத்தை 4 சதவீதத்திலிருந்து 2 சதவீதமாகக் குறைக்கவும் அரசு முடிவு செய்துள்ளது.

மொத்தம் எவ்வளவு
இனி சொத்து விற்பனை, நன்கொடை, பரிமாற்றம் ஆகிய ஆவணங்களுக்கு, 8-6-2017 வரை கடைப்பிடிக்கப்பட்ட வழிகாட்டி மதிப்பில் 5 சதவீதம் முத்திரைத் தீர்வை, 2 சதவீதம் சொத்து மாற்று வரி மற்றும் 2 சதவீதம் பதிவுக் கட்டணம் செலுத்த வேண்டும். குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே அல்லாத ஏற்பாடு ஆவணத்திற்கு 7 சதவீதம் முத்திரைத் தீர்வை, 2 சதவீதம் பதிவுக் கட்டணம் செலுத்த வேண்டும். இந்த நடவடிக்கைகள் எளிய, நடுத்தர மக்களுக்கு, குறிப்பாக வங்கிக் கடன் மூலம் வீடு வாங்குபவர்களுக்குப் பெரிதும் பயனளிக்கும்" என்றார்.












Click it and Unblock the Notifications