வருமான வரி சலுகை கொடுத்தும் வீண்தானா? பட்ஜெட்டுக்கு அதிக மக்கள் போட்ட மார்க் 1 டூ 35 மட்டுமே!
சென்னை: 2025 - 2026 ஆம் ஆண்டுக்கான மத்திய அரசின் பட்ஜெட்டை தாக்கல் செய்திருக்கிறார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். 12 லட்சத்திற்குள் மாத வருமானம் இருந்தால் வரிச்சலுகை அளிக்கப்பட்டு இருக்கும் நிலையில், பட்ஜெட்டுக்கு 1 முதல் 35 மதிப்பெண் மட்டுமே தந்து இருக்கின்றனர் 56 சதவீத மக்கள்.
"ஒன்இந்தியாதமிழ்" நடத்திய வெளிப்படையான கருத்துக் கணிப்பில் கிட்டத்தட்ட 16 ஆயிரம் வாசகர்கள் கடந்த 1 நாளில் வாக்களித்த நிலையில் பட்ஜெட் மக்களை கவரவில்லை என்பதை முடிவுகள் பிரதிபலிக்கிறது.
மத்திய அரசின் 2025 - 2026 ஆம் ஆண்டுக்கான கடந்த 1ஆம் தேதி காலை 11 மணிக்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து 8வது முறையாக பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்திருக்கிறார்.

உலக அளவில் வேகமாக வளரும் பொருளாதாரம் கொண்ட நாடாக இந்தியா இருக்கிறது. வளர்ச்சி அடைந்த நாடாக இந்தியாவை உருவாக்கும் பணிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. அனைவருக்குமான வளர்ச்சி என்ற இலக்கை நோக்கி இந்த அரசு பயணித்து வருகிறது எனக் கூறி பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிர்மலா.
பட்ஜெட்டில் குறிப்பிடத்தக்க மாற்றமாக அதிரடியான அறிவிப்பை வெளியிட்டு இருந்தார் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன். மாதம் ஒரு லட்சம் ரூபாய் வருமானம் பெறுபவர்கள் அதாவது ஆண்டுக்கு 12 லட்சம் ரூபாய் வரை சம்பள வருமானம் பெறுபவர்கள் தனி நபர் வரி செலுத்த தேவையில்லை என்ற அறிவிக்கப்பட்டு இருக்கிறது. 2023ல் 7 லட்சமாக உயர்த்தப்பட்ட வருமான வரி உச்சவரம்பு தற்போது 12 லட்சம் ரூபாயாக அதிகரித்து இருக்கிறது.
அதே நேரத்தில் பட்ஜெட்டில் பீகாருக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கப்பட்டு இருக்கிறது, 12 லட்சம் ரூபாய் வருமான வரி விலக்கு கூட டெல்லி தேர்தலை கருத்தில் கொண்டே அளிக்கப்பட்டிருக்கிறது என எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.
இந்த நிலையில்தான், மத்திய பட்ஜெட் குறித்து ஒன் இந்தியா தமிழ் நமது வெப்சைட்டில் வாக்கெடுப்பு நடத்தியது. அதில் மொத்தம் 15 ஆயிரத்து 956 பேர் வாக்களித்துள்ளனர். 1 முதல் 100 மதிப்பெண்கள் வரை மக்கள் பட்ஜெட்டுக்கு அளிக்கலாம் என கூறப்பட்டிருந்தது. 0 முதல் 35, 36 முதல் 50, 51 முதல் 75, 76 முதல் 100 என 4 பிரிவாக மதிப்பெண்கள் வழங்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் 56.39 சதவீத மக்கள் அதாவது 8998 பேர் பட்ஜெட்டுக்கு 35 சதவீத மதிப்பெண்கள் வரை மட்டுமே வழங்கி இருக்கின்றனர். 13.72 சதவீதம் பேர் அதாவது 2189 பேர் 36 முதல் 50 மதிப்பெண்கள் வரையும், 13.41% பேர் அதாவது 2140 பேர் 51.75 சதவீதம் மதிப்பெண்களையும், 76 முதல் 100 மதிப்புகளை 16.48 சதவீதம் அதாவது 2629 பேர் தந்திருக்கின்றனர். இவர்கள் பட்ஜெட்டால் படுகுஷியில் உள்ள மக்கள் எனப் புரிந்துகொள்ள முடிகிறது.
ஆனால் மொத்தத்தில் பார்த்தால் வருமான வரிச் சலுகை இருந்தாலும் இந்த பட்ஜெட் மக்களை கவரவில்லை என்பதை பிரதிபலிப்பது போலவே இருக்கிறது.
பீகாரில் மக்கானா தொழிற்சாலை, ஏஐ கல்வி, புதிய மருத்துவக் கல்லூரிகள் உள்ளிட்ட பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருந்தாலும் சாமானியர்களின் வாழ்க்கை தரத்த உயர்த்த பட்ஜெட்டில் எவ்வித திட்டங்களும் இல்லை. மேலும், பட்ஜெட்டில் தமிழகம் என்ற வார்த்தை ஒரு முறை கூட இடம்பெறாதது, தமிழகத்திற்கான திட்டங்கள் அறிவிக்கப்படாதது போன்ற காரணங்கள் மக்களை அதிகம் பாதித்திருக்கிறது என புரிந்துகொள்ள முடிகிறது.
ஊதியதாரர்களுக்கு வரிச் சலுகை என்பதை மக்கள் பெரிய அளவில் எடுத்துக் கொள்ளவில்லை என்று இதை வைத்து பார்த்தால் புரிந்துகொள்ள முடிகிறது.












Click it and Unblock the Notifications