ரெடியாகும் "ஹேட்டர்ஸ்".. பிளானில் பாஜக.. வெயிட்டிங்கில் அதிமுக.. நடுவில் பாமக.. எதிர்நோக்கும் திமுக
இந்த மாத இறுதியில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடக்கும் என்று தெரிகிறது
சென்னை: தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர், இந்த மாத மத்தியில் அல்லது இறுதியில் நடக்கக்கூடும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் ஓபிஎஸ் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.. அதற்கு பிறகு, தேர்தல் நடந்து முடிந்தது.. முதல்வராக ஸ்டாலினும் பதவி ஏற்றுக் கொண்டார்..
வழக்கமாக புதிய ஆட்சி அமைந்ததும் அந்த வருஷத்துக்கான முழு பட்ஜெட் உடனடியாக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படும்.
பட்ஜெட்
ஆனால், தொற்று பெருகிய நிலைமையில், அதை கட்டுப்படுத்துவதற்கான பணிகளில் ஸ்டாலின் முழுமையாக ஈடுபட்டு வந்தார். இப்போது கொரோனா தாக்கம் மெல்ல மெல்ல குறைந்து வருகிறது.. இந்நிலையில், 2021-2022ம் ஆண்டுக்கான முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படலாம் என்ற பேச்சு எழுந்துள்ளது.. அந்தவகையில், முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு தாக்கல் செய்ய உள்ள முதல் பட்ஜெட் குறித்து, நிதி அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனையும் நேற்று நடந்தது..!
மானிய கோரிக்கைகள்
அந்த வகையில், இந்த மாதம் பட்ஜெட் கூட்டம் நடக்க உள்ளதாக தெரிகிறது.. சட்டப்பேரவை கூடியதும், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றுவார்... பிறகு நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும்... அதற்கு பிறகு, துறை வாரியான மானிய கோரிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டு, அந்தந்த துறைகளுக்கு தனித்தனியாக நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
திட்டங்கள்
எனவே, இந்த முறையும் திமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்த பல்வேறு மக்கள் நல திட்டங்கள் குறித்த அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம்பெற வாய்ப்புள்ளதாக நம்பப்படுகிறது. ஆனால், இந்த பட்ஜெட் கூட்டத்தொடரை எதிர்க்கட்சிகள் பெரிதும் எதிர்நோக்கி உள்ளன.. ஆளுக்கொரு பிரச்சனையை முன்வைத்து, உரையாற்ற போவதாகவும் தெரிகிறது.. அந்த வகையில், முதல் ஆளாக இருப்பது பாமகதான்..
பாஜக
"அதிமுக ஆட்சியில் அனைத்து வகையான அமைப்பு சாராத் தொழிலாளர்களுக்கு இரு தவணைகளில் தலா ரூ. 1000 வீதம் மொத்தம் ரூ. 2,000 நிதியுதவி வழங்கப்பட்டது... அதேபோல், மாற்றுத் திறனாளிகளுக்கும் தலா ரூ. 1000 வீதம் நிதியுதவி வழங்கப்பட்டது... ஆனால், இப்போது மாற்றுத்திறனாளிகள் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு எந்த உதவியும் வழங்கப்படவில்லை" என்று ராமதாஸ் இப்போதே ஆரம்பித்துவிட்டார்.
திமுக
மேலும் திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவது குறித்து அதிமுக உட்பட பாமக, பாஜக எதிர்க்கட்சிகள் பல்வேறு கேள்விகளை எழுப்ப தயாராகிவிட்டதாம்.. இப்போதே அதுகுறித்த ஆலோசனைகளிலும் ஈடுபட்டு வருகின்றனராம்.. அதுமட்டுமல்லாமல், கூட்டுறவு வங்கிகளில் உள்ள நகை கடன்கள் தள்ளுபடி, இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் உரிமைத் தொகை, 7 பேர் விடுதலை குறித்த திமுகவின் நிலைப்பாடு போன்ற மிக முக்கிய பிரச்சினைகள் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்விகள் எழுப்பக்கூடும் என்று தெரிகிறது.,
சட்டமன்றம்
இந்த முறை பாஜகவில் 4 பேர் சட்டமன்றத்திற்கு போயுள்ளனர்.. அதேபோல, 18 உறுப்பினர்கள் காங்கிரஸில் இருந்து சென்றுள்ளனர்.. எப்படியும் 7 பேர் விடுதலை சம்பந்தமாக காங்கிரசும் கேள்வி எழுப்பும்.. ஒருவேளை இந்த விவகாரத்தில், முதல்வர் ஸ்டாலின் ஆதரவான நிலைப்பாட்டை எடுத்தால், அதை எதிர்க்க காங்கிரசும் தயாராகி வருகிறது.. ஆக மொத்தம், முதல்வர் ஸ்டாலின் எடுக்கப்போகும் முக்கிய முடிவுகள், அறிவிப்புகள் குறித்த இந்த முறை பட்ஜெட் கூட்டத் தொடரானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.. பார்ப்போம்!