சென்னையில் நள்ளிரவு நேரத்தில் சடசடவென சரிந்த கட்டிடம்.. மழைநீர் வடிகால் தோண்டும்போது விபரீதம்!
சென்னை: சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் மழைநீர் வடிகால் பணிகளுக்காக நேற்று நள்ளிரவு பள்ளம் தோண்டப்பட்டுக் கொண்டிருந்தபோது, அருகே இருந்த கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. நல்லவேளையாக உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை.
மழை காலம் ஆரம்பித்தாலே சென்னை நகரில் பெரும்பாலான பகுதிகள் நீரில் மிதக்கத் தொடங்கி விடுகின்றன. விரைவில் வடகிழக்குப் பருவ மழை தொடங்க உள்ள நிலையில், சென்னை நகரம் மழைநீரால் சூழ்வதை தவிர்க்கும் வகையில் தமிழ்நாடு அரசு அதிரடியாக திட்டம் வகுத்து நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

மழை நீர் வடிகால் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அண்மையில் கூட நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை விரைந்து முடிக்குமாறு உத்தரவிட்டார். அதன்படி சென்னையின் பல இடங்களில் பணிகள் வேகமெடுத்துள்ளன.
அந்தவகையில் சென்னை சிந்தாதிரிப்பேட்டை ஜெயின் கோவில் அருகே அருணாச்சலம் தெருவில் உள்ள பகுதியில் மழை நீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதற்காக கட்டிடத்தின் அருகே பள்ளம் தோண்டப்பட்டுள்ளது.
அப்போது கட்டிடத்தின் ஸ்திரத்தன்மை குறைந்து, அந்தக் கட்டிடத்தில் உள்ள 2 கடைகளின் முன்புறம் இடிந்து விழுந்துள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கடைகள் மூடப்பட்டிருந்ததால் யாருக்கும் எந்த சேதமும் ஏற்படவில்லை. எனினும், பொதுமக்கள் யாரும் கட்டிடத்தின் அருகே செல்லாமல் இருக்க பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications