சென்னையில் 1000 சதுர அடிக்கு மேல் வீடு கட்ட போறீங்களா! அனுமதி கட்டணம் 100% உயர்வு! மாநகராட்சி அதிரடி
சென்னை: சென்னையில் 1000 சதுர அடிக்கு மேல் வீடு கட்ட அனுமதி கட்டணம் 100 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியின் மாதாந்திர மாமன்றக் கூட்டம் நேற்றுமுன் தினம் மாலை ரிப்பன் கட்டடத்தில் நடந்தது. அப்போது 54 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

சென்னையில் கட்டட அனுமதிக்காக கட்டணங்களை உயர்த்தும் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதாவது 1000 சதுர அடிக்கு மேல் வீடுகளுக்கான கட்டடங்கள் கட்டினால் அனுமதி கட்டணம் 100 சதவீதம் வரை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
தளப்பரப்பு குறியீட்டின் அடிப்படையில் (FSI Floor Surface Index) 100 சதுர மீட்டருக்குள் வீடு கட்டினால் ஏற்கெனவே 1 முதல் 40 சதுர மீட்டர் வரை 10 சதுர மீட்டருக்கு ரூ 90 கட்டணமும், 41 முதல் 100 சதுர மீட்டர் வரை 10 சதுர மீட்டருக்கு ரூ 155 கட்டணமும் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த கட்டணமானது ஏழை, நடுத்தர மக்களின் நலன் கருதி உயர்த்தப்படவில்லை.
ஆனால் அதே நேரம் வீடு, கல்வி நிறுவனங்கள், வணிகம், தொழிற்சாலைகளின் தளபரப்பு குறியீட்டில் 100 சதுர மீட்டருக்கு (1076 அடி) மேல் கட்டட பரப்பு இருந்தால் கட்டடங்களுக்கான அனுமதி கட்டணம் 100 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதில் குடியிருப்பு மற்றும் கல்வி கட்டடங்களை பொருத்தவரை 1 முதல் 40 சதுரமீட்டர் வரை 10 சதுர மீட்டருக்கு ரூ 90, 41-முதல் 100 சதுர மீட்டர் வரை 10 சதுர மீட்டருக்கு ரூ.155, 101 முதல் 400 சதுர மீட்டர் வரை 10 சதுர மீட்டருக்கு ரூ.410, 401 சதுர மீட்டர் மற்றும் அதற்கு மேல் 10 சதுர மீட்டருக்கு 1050 என இருந்தது. இந்த தொகையானது, தற்போது முறையே ரூ.180, ரூ.310, ரூ.820, ரூ.2,100 என இருமடங்காக உயர்த்தப்பட்டுள்ளது.
அது போல் வணிகம் மற்றும் தொழிற்சாலை கட்டடங்களுக்கும் ஏற்கெனவே வசூலிக்கப்பட்ட தொகை இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது. அதாவது 1 முதல் 40 சதுரமீட்டர் வரை 10 சதுர மீட்டருக்கு ரூ 210, 41-முதல் 100 சதுர மீட்டர் வரை 10 சதுர மீட்டருக்கு ரூ.370, 101 முதல் 400 சதுர மீட்டர் வரை 10 சதுர மீட்டருக்கு ரூ.920, 401 சதுர மீட்டர் மற்றும் அதற்கு மேல் 10 சதுர மீட்டருக்கு 2300 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கிணறு, குடிநீர் தொட்டி போன்றவற்றுக்கான கட்டணம், சுற்றுச்சுவருக்கான அனுமதி கட்டணமும் இரு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. இதே போல் பழைய கட்டடங்களை இடிப்பதற்கு அனுமதி கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது. மாமன்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட இந்த தீர்மானத்தின் படி புதிய கட்டண உயர்வு வரும் 10ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு மாநகராட்சியின் வருவாயை அதிகரிக்க உயர்த்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications