தலைமை செயலகத்தில் இப்படி செய்யலாமா.. அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் செய்த சம்பவம்.. விஜய்க்கு புது பிரச்சனை!
சென்னை: தலைமைச் செயலகத்தில் வைத்து அமைச்சர் புஸ்ஸி ஆனந்த், கட்சிப் பணிகளை செய்துள்ள சம்பவம் சர்ச்சையாகி இருக்கிறது. அதிமுக மாநில இலக்கிய அணி செயலாளர் சிவராஜ் மற்றும் அதிமுக மாநில மகளிர் அணி துணைச் செயலாளர் செல்வ்வி என் ஜெயதேவி ஆகியோரை தலைமைச் செயலகத்தில் வைத்து தவெகவில் இணைத்துள்ளார். இதனால் அலுவல் பணிகளை செய்யும் படத்தில் கட்சிப் பணிகளை செய்வது சரியா என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
சட்டசபைத் தேர்தலில் தவெக 108 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சி மாறி உள்ளது. இதன்பின் சிபிஐ, காங்கிரஸ், விசிக, சிபிஎம், ஐயூஎம்எல், அதிமுகவில் எஸ்பி வேலுமணி பிரிவு ஆகியோரின் ஆதரவால் ஆட்சியை பிடித்துள்ளது. இதையடுத்து மே 10ஆம் தேதி தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். அவருடன் சேர்ந்து புஸ்ஸி ஆனந்த், செங்கோட்டையன் உள்ளிட்ட 9 பேர் அமைச்சராக பதவியேற்றனர்.

இவர்களுக்கு ஒரு வாரமாக இலாகா ஒதுக்கீடு செய்யப்படாமல் இருந்தது. அதேபோல் அமைச்சரவைக்கு புதியவர்கள் என்பதால், அவர்களுக்கு வகுப்புகளும் எடுக்கப்பட்டன. இதன்பின் புஸ்ஸி ஆனந்த்-க்கு நீர் வளத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டது. பள்ளிக்கல்வித்துறை ராஜ்மோகனுக்கும், சுகாதாரத்துறை அருண்ராஜ்க்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதன்பின் விஜய் முன்னிலையில் புஸ்ஸி ஆனந்த் அமைச்சரவை பொறுப்புகளை ஏற்றார். இந்த நிலையில் தலைமைச் செயலகத்தில் தவெக பொதுச்செயலாளரும், அமைச்சருமான புஸ்ஸி ஆனந்த் கட்சிப் பணிகளை மேற்கொண்டிருப்பது தெரிய வந்துள்ளது. நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த் முன்னிலையில் அதிமுக மாநில இலக்கிய அணி இணைச் செயலாளர் டி சிவராஜ் தவெகவில் இணைந்துள்ளார்.
அதேபோல் அதிமுக மாநில மகளிர் அணி துணைச் செயலாளர் செல்வி என் ஜெயதேவி உள்ளிட்டோர் தவெகவில் இணைந்துள்ளார். இவர்கள் தவெகவில் இணைந்ததில் யாருக்கும் எந்த பிரச்சனையும் கிடையாது. ஆனால் தலைமைச் செயலகத்தில் வைத்து தவெகவில் இணைக்கப்பட்டது தான் பிரச்சனையாக மாறியுள்ளது.
அரசு மற்றும் அலுவல் பணிகளை மேற்கொள்ளவே தலைமைச் செயலகம் இருக்கிறது. கட்சிப் பணிகளை அந்தந்த கட்சி அலுவலகத்தில் வைத்துதான் செய்ய வேண்டும். ஆனால் புஸ்ஸி ஆனந்த் அலுவலகப் பணிகளை செய்யும் இடத்தில் கட்சிப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். இதனால் அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன.












Click it and Unblock the Notifications