என்னது திருக்கோவிலூர் தொகுதிக்கும் இடைத்தேர்தலா? தேர்தல் ஆணைய அறிவிப்பால் குழப்பம்! அதிகாரி விளக்கம்
சென்னை: தமிழ்நாட்டில் திருக்கோவிலூர் சட்டப்பேரவை தொகுதிக்கு இடைத்தேர்தல் என முதலில் அறிவிப்பு வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது. எனினும், தேர்தல் தேதி அறிவிப்பில் திருக்கோவிலூர் தொகுதி இடம்பெறவில்லை. தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிக்கையால் குழப்பம் ஏற்பட்டது.
543 மக்களவைத் தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தலை நடத்த உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. முதற்கட்ட தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதியும், இரண்டாம் கட்ட மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 26ஆம் தேதியும், மூன்றாம் கட்ட மக்களவைத் தேர்தல் மே 7ஆம் தேதியும், நான்காம் கட்ட மக்களவைத் தேர்தல் மே 13ஆம் தேதியும் நடக்கிறது. ஐந்தாம் கட்ட மக்களவைத் தேர்தல் மே 20ஆம் தேதியும், ஆறாம் கட்ட மக்களவைத் தேர்தல் மே 25ஆம் தேதியும், ஏழாம் கட்ட வாக்குப்பதிவு ஜூன் ஒன்றாம் தேதியும் நடக்கயிருக்கிறது.

மக்களவைத் தேர்தல் மட்டுமல்லாமல், இந்த முறை ஒடிசா, ஆந்திரா, சிக்கிம், அருணாசலப் பிரதேச மாநிலத்திற்கு சட்டப்பேரவையின் பதவிக்காலம் முடிவடைய இருப்பதால், இந்த நான்கு மாநிலங்களுக்கும் சட்டசபை தேர்தல் நடக்க இருக்கிறது. அதற்கான தேர்தல் அறிவிப்புகளும் வெளியிடப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் இடைத்தேர்தல்: தமிழ்நாட்டின் விளவங்கோடு உள்ளிட்ட நாடு முழுவதும் காலியாக உள்ள 26 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு, நாடாளுமன்றத் தேர்தலுடன் இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதிக்கு முதற்கட்ட மக்களவைத் தேர்தல் தேதியின்போது, தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது, தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தல் நடைபெறும் ஏப்ரல் 19ஆம் தேதியன்றே விளவங்கோடு தொகுதி இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதிகளின் பட்டியலில் திருக்கோவிலூர் தொகுதியும் இடம்பெற்றிருந்தது. பொன்முடி தகுதி நீக்கம் காரணமாக அங்கு இடைத்தேர்தல் என அறிவித்தது தேர்தல் ஆணையம்.
திருக்கோவிலூர் தொகுதி: பொன்முடி மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்ததன் காரணமாக, திருக்கோவிலூர் தொகுதி காலி என்ற அறிவிப்பு திரும்பப் பெறப்பட்டது. அப்படி இருக்கும்போது, திருக்கோவிலூர் தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டநிலையில், தேர்தல் தேதி அறிவிப்பில் திருக்கோவிலூர் தொகுதியின் பெயர் இல்லை.
இன்னும் 4 நாள் தான்.. தமிழ்நாட்டில் வேட்பு மனு தாக்கல் மார்ச் 20ல் தொடக்கம்.. ஏப். 19 வாக்குப்பதிவு!
குழப்பம்: தேர்தல் ஆணையம் வெளியிட்ட அட்டவணையில் திருக்கோவிலூர் தொகுதி இடைத்தேர்தல் எனக் குறிப்பிடப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. எனினும், அந்த பட்டியல் முந்தைய நிலவரப்படி இடம்பெற்றது எனவும், அங்கு இடைத்தேர்தல் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்: திருக்கோவிலூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் இல்லை. முதல் அறிவிப்பில் தவறுதலாக இடம்பெற்றுவிட்டது என்றும், அடுத்த தேர்தல் தேதி அட்டவணையில் திருக்கோவிலூர் தொகுதி இல்லை என்றும், தமிழ்நாட்டில் விளவங்கோடு தொகுதியில் மட்டும் இடைத்தேர்தல் நடைபெறும் என்றும் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாகு விளக்கம் அளித்துள்ளார்.














Click it and Unblock the Notifications