இடைத் தேர்தல் நடத்தலாமா, வேண்டாமா? அறிக்கை அனுப்பினார் திருவாரூர் தேர்தல் அதிகாரி.. அடுத்து?
Recommended Video

சென்னை: திருவாரூர் தொகுதியில் தேர்தல் நடத்தலாமா, வேண்டாமா என்பது குறித்து திருவாரூர் மாவட்ட தேர்தல் அதிகாரி நிர்மல்ராஜ், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவிற்கு அறிக்கை அனுப்பியுள்ளார்.
திருவாரூரில் வரும் 28ம் தேதி இடைத் தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இந்த நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ராஜா, இந்திய தேர்தல் ஆணையத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார்.

அதில், திருவாரூர் தொகுதி புயலால் பாதிக்கப்பட்ட தொகுதியாகும். அங்கு தேர்தல் நடத்தும் முன்பாக நிலவரம் குறித்து, அறிந்து கொண்டு தேர்தல் அறிவிப்பை வெளியிட்டு இருக்க வேண்டும். அந்த தொகுதியின் நிலைமை என்ன என்பது குறித்து தேர்தல் ஆணையம் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு டி.ராஜா தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவிடம் இது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டது. இதையடுத்து திருவாரூரில் தேர்தல், நடத்தலாமா வேண்டாமா என்பது குறித்து விவசாய பிரதிநிதிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரிடமும் கருத்து கேட்டு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று சத்யபிரதா சாஹூ, திருவாரூர் மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான, நிர்மல்ராஜை கேட்டுக்கொண்டார்.
இன்று இரவுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், மாலையிலேயே, அறிக்கையை அனுப்பியுள்ளார், நிர்மல்ராஜ்.
முன்னதாக, அனைத்துக் கட்சி பிரமுகர்களுடன், நிர்மல்ராஜ் ஆலோசனை நடத்தியிருந்தார். அதில் அனைத்து கட்சி பிரமுகர்களுமே, திருவாரூர் தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என்று கோரிக்கைவிடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நிர்மல்ராஜ் அனுப்பிய அறிக்கையை இந்திய தேர்தல் ஆணையத்திற்கு சத்யபிரதா சாஹூ அனுப்பி வைப்பார். இதை வைத்து இந்திய தேர்தல் ஆணையம், திருவாரூரில் தேர்தல் நடத்தலாமா, வேண்டாமா என்பது குறித்து அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications