கமல்ஹாசனின் "ராஜ" பார்வை.. ஓஹோ, எதுவானாலும் ஓகே தான் போல.. என்னாது 3 தொகுதியா? அலறும் திமுக கூட்டணி
சென்னை: எம்பி தேர்தலுக்காக, தமிழக கட்சிகள் தயாராகி கொண்டிருக்கின்றன.. அந்தவகையில், கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யமும் ஜரூர் வேகத்தில் தயாராகி வருகிறது.
திமுக கூட்டணி மட்டுமே இப்போதைக்கு வலுவாக உள்ளது.. ஏற்கனவே ஐக்கியமாகியுள்ள கட்சிகளே, இந்த முறையும் கூட்டணியில் தொடர்வதாக தெரிகிறது. ஆனால், கூடுதலாக 2 கட்சிகள் கூட்டணியில் இணையலாம் என்று தெரிகிறது. அதில் ஒன்றுதான் மக்கள் நீதி மய்யம்.

கம்யூனிஸ்ட்கள்: அந்தவகையில், கமலுக்கு, 1 சீட் வழங்க திமுக மேலிடம் முடிவு செய்திருப்பதாக கடந்த 2 மாதங்களாகவே செய்திகள் கசிந்து கொண்டிருக்கின்றன.. ஆனால், 2 சீட்டையாவது வாங்கிவிட வேண்டும் என்றும், முக்கியமாக கோவை தொகுதியை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்றும் மய்யத்தினர் உறுதியாக உள்ளதாக தெரிகிறது.
ஆனால், கோவை தொகுதி ஏற்கனவே கம்யூனிஸ்ட்களின் வசம் இருப்பதால், இந்த தொகுதியை விட்டுத்தர அந்த கட்சியினர் மறுக்கிறார்கள்.. வேண்டுமானால், ஐஜேகே பாரிவேந்தருக்கு ஒதுக்கிய பெரம்பலூரை, கமலுக்கு தருவதாக சொல்கிறதாம் திமுக மேலிடம்.. ஆனால், இதனை கமல் ஏற்கவில்லை என்றும் செய்திகள் வட்டமடித்தன. இப்போது விஷயம் என்னவென்றால், 3 தொகுதிகளில் மநீம குறியை செலுத்தி வருகிறாம்.
3 தொகுதிகள்: தென் சென்னை, மதுரை, கோவை ஆகிய 3 தொகுதிகளிலும், மய்யத்தினர் பம்பரமாக சுழன்று வேலை பார்த்து கொண்டிருக்கிறார்கள்.. இந்த 3 தொகுதிகளில், ஏதாவது ஒரு தொகுதியை கூட்டணியில் கேட்டுப் பெற்றுவிட வேண்டும் என்பதிலும் மய்யத்தினர் திடமாக இருக்கிறார்களாம். அதனால்தான், இந்த 3 தொகுதிகளில் எந்த தொகுதியை ஒதுக்கினாலும் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக தீயாய் களப்பணிகளும் நடந்து கொண்டிருக்கின்றனவாம்.
இந்த 3 தொகுதிகளிலும் பூத் கமிட்டிகளை அமைத்து கட்சியை பலப்படுத்தும் பணிகளிலும் மய்யத்தினர் சுழன்று கொண்டிருக்கிறார்கள்.
2 கம்யூனிஸ்ட்கள்: ஆனால், கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, விசிக, 2 கம்யூனிஸ்டுகள் இடம்பெற்றுள்ளதால், அவர்களின் விருப்பம் என்னவாக இருக்கிறது என்று தெரியவில்லை.. கோவையில் கம்யூனிஸ்ட்கள் வலுவாக உள்ளதை போலவே, மதுரையிலும் கம்யூனிஸ்ட்கள்தான வலுவாக உள்ளனர்.. அதனால், மய்யம் குறி வைத்துள்ள 2 இடங்களில் ஒன்றையாவது கம்யூனிஸ்ட்கள் விட்டுத்தருவார்களா என்று தெரியவில்லை..
எனினும், கூட்டணி கட்சிகள் கேட்கும் சீட்டை ஒதுக்க வேண்டிய கட்டாயத்தில் திமுகவும் உள்ளதால், இது தொடர்பான ஆலோசனைகளில் விரைவில் இறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த சிக்கல்: இப்போது இன்னொரு சிக்கல் என்னவென்றால், தங்களுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளையே கூட்டணி கட்சிகளும் கேட்பதால் எந்தெந்த தொகுதிகளை ஒதுக்குவது என்ற குழப்பமும் திமுகவுக்கு வந்துள்ளதாக தெரிகிறது..
கடந்த முறை காங்கிரஸ் போட்டியிட்ட 9 தொகுதிகளில், 3 தொகுதிகளில் இந்த முறை திமுகவே நேரடியாக களமிறங்க திட்டமிட்டு வருகிறதாம். அப்படியிருக்கும்போது, கூட்டணி கட்சிகள் எதிர்பார்க்கும் தொகுதிகள் கிடைக்குமா? அல்லது திமுக கூட்டணிகளுக்கு விருப்பம்போல விட்டுத்தருமா? என்றெல்லாம் தெரியவில்லை.
மநீம கமல்ஹாசன்: எப்படியும் தங்களுக்கு ஒரு சீட் கம்பார்ம்டு என்று மக்கள் நீதி மய்யம் உறுதியாக உள்ளது.. அப்படி ஒதுக்கப்படும் அந்த ஒரு தொகுதியில் போட்டியிட தலைவர் கமல்ஹாசனும் தயாராகவே உள்ளதாக தெரிகிறது.. பொறுத்திருந்து பார்ப்போம்...!!












Click it and Unblock the Notifications