பழைய பன்னீரு பிடித்த அடம்.. சசிகலாவை வீசியெறிந்த ஓ.பன்னீர்செல்வம்.. மிரட்டும் எடப்பாடியின் மானாமதுரை
சென்னை: அதிமுகவில் சசிகலா, ஓபிஎஸ், தினகரன் இணைவார்களா? என்ற சந்தேகம் பலமாக எழுந்து வரும்நிலையில், இதற்கு மீண்டும் ஒரு பதிலடியை தந்துள்ளது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் தரப்பு... என்ன நடந்தது?
இத்தனை காலமும் இணக்கமின்றி காணப்பட்ட சசிகலாவின் குடும்பம், சமீப நாட்களாகவே ஒன்றுபட்டுள்ளதாக தெரிகிறது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சமாளிக்க வேண்டுமானால், அதிமுகவில் மீண்டும் இணையவேண்டுமானால், முதலில் குடும்ப ரீதியான ஒற்றுமை அவசியம் என்பதை உணர்ந்தே இப்படியொரு மாற்றம் மன்னார்குடி குடும்பத்தில் ஏற்பட்டுள்ளதாம்.

ஒற்றுமை: திவாகரன் முன்னெடுத்த முயற்சியால், இப்போது சசிகலாவுடன் தினகரன் மற்றும் திவாகரன் குடும்பமும் ஒன்று சேர்ந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இதையொட்டியே சசிகலாவின் அரசியல் பயணம் மறுபடியும் துவங்கியிருக்கிறதாம்.
ஆனால், அதிமுக கூடாரத்தில் சசிகலா தரப்பை இணைப்பதற்கான எந்த சாத்தியக்கூறுகளும் காணப்படவில்லை.. இத்தனைக்கும், தேர்தலில் தொடர் தோல்விகள், வாக்கு சதவீதம் குறைந்திருப்பது, வாக்குகள் பிரிவது, திமுகவின் அசுர பலம், பாஜகவின் வியூகங்கள் போன்றவை குறித்தெல்லாம் அதிமுக நிர்வாகிகளிடம், எடப்பாடி பழனிசாமி ஆலோசித்து வருகிறாரே தவிர, சசிகலா, ஓபிஎஸ் பற்றின பேச்சையே எங்குமே எடுக்கவில்லையாம்.
6 சீனியர்கள்: தென்மண்டலத்தில் முக்குலத்தோர் ஆதரவு தேவையானால், சசிகலா, தினகரன், ஓபிஎஸ்ஸை கட்சிக்குள் இணைப்பது அவசியம் என்று எடப்பாடி பழனிசாமியிடம் நாகை, மயிலாடுதுறை நிர்வாகிகள் வலியுறுத்தினார்களாம்.. அதேபோல, 6 முன்னாள் அமைச்சர்கள் சேலத்திலுள்ள எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கே சென்று, சசிகலா தரப்பை இணைப்பது குறித்து வலியுறுத்தினார்களாம். ஆனாலும், எடப்பாடி பழனிசாமி இதற்கெல்லாம் அசரவில்லையாம்.
கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்களை கட்சிக்குள் இணைக்கும் எண்ணம் கொஞ்சமும் கிடையாது என்பதே அதிமுகவின் நிலைப்பாடாக உள்ள நிலையில், இதையே மூத்த தலைவர் உதயகுமாரை வைத்தும் அறிவிக்க செய்தாராம்..
டெல்டா முன்னாள்கள்: ஆனாலும், டெல்டா மாவட்டத்தை சேர்ந்த 3 முன்னாள் அமைச்சர்கள் விரைவில் சசிகலாவை நேரில் சந்தித்து அவருக்கு ஆதரவு தெரிவிக்க போவதாக அடுத்த பூகம்பம் கிளம்பியது.. எடப்பாடி பழனிசாமிக்கு சில முன்னாள்கள் அழுத்தம் தர துவங்கியிருப்பதாகவும், இதனால், கட்சிக்குள் சலசலப்புகள் எழுந்து வருவதாகவும் தகவல்கள் வெடித்து வருகின்றன.
உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிடுவதற்கு ஏற்கனவே, அதிமுக மேலிடம் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், உறுதிப்படுத்தப்படாத பல யூகங்கள் ஓயாமல் இணையதளத்தை வட்டமடித்து வருகின்றன. அதனால்தானோ என்னவோ, அதிமுக ஆதரவாளர்களே இந்த விஷயத்தில் நேரடியாக களமிறங்கவிட்டார்கள்.
பரபரப்பு: இது தொடர்பாக சிவகங்கை மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் அதிமுக சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருக்கின்றன.. அந்த போஸ்டரில், "பன்னீரை முதல்வர் பதவியில் இருந்து நீக்கம் செய்தது சசிகலா. சசிகலா முதல்வராவதை தடுத்தது பன்னீர். சசிகலா, தினகரன் இருவரையும் அதிமுகவில் இருந்து நீக்கினால் தான் கட்சியில் சேருவேன் என அடம்பிடித்து சொன்னது பன்னீர்" என்று அச்சிடப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் தொகுதியில் தனக்கு வாக்களித்த மக்களுக்கு கடந்த 2 நாட்களாகவே ஓபிஎஸ் நன்றி தெரிவித்து வருகிறார்... சசிகலாவும் தென்மாவட்டங்களில் சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளார். இப்படிப்பட்ட சூழலில், சிவகங்கை, மானாமதுரை, திருப்புவனம் ஆகிய பகுதிகளில் எதிர்ப்பு போஸ்டர்கள் ஒட்டியிருப்பது, மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னணி மானாமதுரை: காரணம், சிவகங்கை மாவட்டத்திலேயே மானாமதுரை தொகுதியில்தான் அதிமுகவினர் அதிகமாக இருக்கிறார்கள்.. மானம் காத்த மானாமதுரை தொகுதி என்று அதிமுகவினரே சொல்வார்கள்.. கடந்த லோக்சபா தேர்தலில்கூட, மானாமதுரையில் அதிமுகவுக்கு 3வது இடம் கிடைத்திருந்தது.. இப்படிப்பட்ட சூழலில், மானாமதுரை, சிவகங்கை, திருப்புவனம் பகுதிகளில் அதிமுகவினர் ஒட்டியிருக்கும் போஸ்டர்களால், தென்மாவட்டமே தகித்து வருகிறது.












Click it and Unblock the Notifications