8 லட்சம் சம்பாதித்தால் உயர்சாதி ஏழை, 2.5 லட்சத்துக்கு வரியா? மத்திய அரசுக்கு சென்னை ஐகோர்ட் நோட்டீஸ்
சென்னை: உயர்சாதி ஏழைகள் என்று வரையறுக்கப்பட்டு இருப்பவர்களுக்கான 10% பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீட்டுக்கு எதிராக திமுக உள்ளிட்ட கட்சிகள் பல்வேறு வழக்குகளை தொடர்ந்து இருக்கும் நிலையில், வருமான வரியுடன் தொடர்புபடுத்தி லாஜிக்காக ஒரு வழக்கு தொடரப்பட்டு இருக்கிறது. அதுகுறித்து விரிவாக பார்ப்போம்.
இந்தியாவில் சாதி ஏற்றத்தாழ்வு முறை பல நூறு ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இந்த நிலையில் சமூக நீதியை நிலைநாட்டி சாதிய இழிவை ஒழித்து கட்ட வேண்டும் என்பதற்காக இந்தியாவில் இடஒதுக்கீடு முறை கொண்டு வரப்பட்டது.
இந்தியாவில் தாழ்த்தப்பட்ட சாதிகள், பிற்படுத்தப்பட்ட சாதிகள், சிறுபான்மையினர் என்று வகைப்படுத்தப்பட்டு உள்ளவர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மத்திய மாநில அரசுகள் இடஒதுக்கீட்டை வழங்கி வருகின்றன.
உயர்சாதி ஏழைகளுக்கு 10% இடஒதுக்கீடு.. பாஜக கொள்கை வழியில் அதிமுக.. அமைச்சர் பொன்முடி வருத்தம்!
இடஒதுக்கீட்டின் பயன்
இடஒதுக்கீட்டால் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தினர் நன்றாக படித்து உயர் பதவிகளில் இன்று அலங்கரித்து வருகிறார்கள். இவ்வாறு வழங்கப்படும் இடஒதுக்கீட்டை கடுமையாக எதிர்த்து வந்த உயர்சாதியினர், தங்கள் சமுதாயத்திலும் ஏழைகள் இருப்பதால் பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தினர்.
உயர்சாதியினருக்கு இடஒதுக்கீடு
பொருளாதார அடிப்படையில் உயர் சாதியினருக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்கு திமுக, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் உயர்சாதி ஏழைகளுக்கு பொருளாதார அடிப்படையில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்டம் அமல்படுத்தப்பட்டது.
உச்சநீதிமன்றத்தில் வழக்கு
இது இடஒதுக்கீடு வரம்பு 50 சதவீதத்திற்குள் இருக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்ற உத்தரவை மீறிவிட்டதாக வழக்குகள் தொடரப்பட்டன. திமுக, விடுதலை சிறுத்தைகளும் அரசியலமைப்பு சட்டத்தில் பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்குவதற்கு இடமில்லை என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.
உச்சநீதிமன்றம் உத்தரவு
கடந்த சில வாரங்களுக்கு முன்பாக உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான அமர்வு இந்த வழக்கின் தீர்ப்பை வெளியிட்டது. அதில், 5 நீதிபதிகளில் 4 நீதிபதிகள் உயர்சாதியினருக்கு வழங்கப்படும் 10% பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீடு செல்லும் என்று தீர்ப்பளித்தனர்.
திமுக எதிர்ப்பு
உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு ஆகிய ஆதரவு தெரிவித்தன. ஆனால், திமுக தரப்பில் இதனை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்து இருந்தார். கடந்த வாரம் அனைத்து கட்சிக் கூட்டத்தை கூட்டி தமிழ்நாடு அரசு சார்பில் இதனை எதிர்த்து மனுத்தாக்கல் செய்ய முடிவெடுக்கப்பட்டது.
புதிய வழக்கு
இந்த நிலையில் ஆண்டுக்கு ரூ.8 லட்சத்துக்கு குறைவாக சம்பாதிப்பவர் 10% இடஒதுக்கீடு பெரும் உயர்சாதி ஏழை என்றால், ஆண்டுக்கு ரூ.2.50 லட்சம் சம்பாதிக்கும் மக்கள் ஏன் வருமான வரி செலுத்த வேண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் புதிய வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் மத்திய அரசுக்கு பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பி உள்ளது.