அற்ப நோக்கத்தில் வழக்கு போட்டுருக்காரு.. அபராதம் போடுங்க.. கேவி ஆனந்த் ஐகோர்ட்டில் பரபரப்பு பதில்
சென்னை: அற்ப நோக்கத்தில் காப்பான் படத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்தவருக்கு அபராதம் விதிக்க வேண்டும் என்று இயக்குனர் கே.வி.ஆனந்த் சென்னை உயர்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.
பிரபல இயக்குநர் கே.வி. ஆனந்த் இயக்கத்தில் நடிகர் சூர்யா, மோகன்லால், ஆர்யா உள்ளிட்டோர் நடித்த காப்பான் திரைப்படம் வருகிற 20-ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த நிலையில் சென்னை குரோம்பேட்டையை சேர்ந்தவர் ஜான் சார்லஸ் தாக்கல் செய்துள்ள மனுவில், கடந்த 2016-ம் ஆண்டு 'சரவெடி' என்ற தலைப்பில் கதை எழுதி, கதையை பிரபல இயக்குனர் கே.வி.ஆனந்திடம் விரிவாக கூறியதாக குறிப்பிட்டிருந்தார்.
எதிர்காலத்தில் இந்த கதையை படமாக்கும்போது வாய்ப்பு தருவதாக அவர் கூறியதாகவும், இந்த நிலையில், சரவெடி கதையை காப்பான் என்ற பெயரில் கே.வி.ஆனந்த் படமாக்கியுள்ளார். எனவே காப்பான் படத்தை வெளியிட தடை விதிக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தார்..
இந்த வழக்கு நீதிபதி சதீஷ் குமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது .அப்போது பட தயாரிப்பு நிறுவனமான லைக்கா நிறுவனம் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் சரவெடி படத்தின் கதை வேறு,காப்பான் கதை வேறு என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் படத்தின் இயக்குநர் கே.வி.ஆனந்த் சார்பில் பதில் மனுவில் மனுதாரரை எந்த காலத்திலும் தான் சந்தித்தது இல்லை என்றும் அடையாளம் தெரியாதவர்களிடம் கதை கேட்பதில்லை, என்றும் சரவெடி படத்தின் கதை வேறு தன்னுடைய கதை வேறு இதற்கு தொடர்பு இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
அற்ப நோக்கில் வழக்கு தொடரப்பட்டுள்ளது, எனவே காப்பான் படத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்த மனுதாரருக்கு அபராதம் விதித்து மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.. வழக்கை விசாரித்த நீதிபதி சதீஷ்குமார், விசாரணையை வருகிற திங்கட் கிழமைகளுக்கு ஒத்திவைத்துள்ளார்.