விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்த வந்த நடிகர் விஜய் மீது காலணி வீச்சு.. போலீஸுக்கு போன விஜய் இயக்கம்
சென்னை: மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு சென்ற போது நடிகர் விஜய் மீது காலணி வீசிய விவகாரத்தில் சட்டரீதியான நடவடிக்கை கோரி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் நிமோனியா காய்ச்சலால் கடந்த டிசம்பர் 26 ஆம் தேதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி காலமானார். இது திரையுலகத்தினர், அரசியல்வாதிகள், ரசிகர்கள், கட்சியினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையடுத்து அவரது உடல் சாலிகிராமத்தில் உள்ள அவருடைய வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். இதைத் தொடர்ந்து அங்கு விஜயகாந்தின் உடலுக்கு பட்டாடை உடுத்தப்பட்டு, கண்களுக்கு கூலிங் கிளாஸ், கழுத்தில் கட்சி துண்டு ஆகியவை அணிவிக்கப்பட்டன.
இதையடுத்து அவரது உடல் தொண்டர்கள் அஞ்சலி செலுத்த கோயம்பேட்டில் இயங்கி வரும் கட்சி அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவரது உடலுக்கு ஏராளமானோர் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். விஜயகாந்தின் உதவியை ஏதாவது ஒரு வகையில் பெறாதவர்கள் இருக்க முடியாது. அப்படி அவரால் பலனடைந்தவர்களும் விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்த வந்தனர்.
விஜயகாந்தின் குணத்தால் ஈர்க்கப்பட்டவர்களும் வந்தனர். இப்படி ரசிகர்கள், தொண்டர்கள், பிரபலங்கள் என எல்லாரும் ஒரே வழியில் அனுமதிக்கப்பட்டதால் அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டது. பெரும்பாலான பிரபலங்கள் கூட்டத்தில் சிக்கி மிகவும் கஷ்டப்பட்டுத்தான் வந்தனர்.
அப்படிப்பட்ட நிலையில் நடிகர் விஜய் அன்றைய தினம் இரவு 10.30 மணிக்கு விஜயகாந்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்தார். வரும் போதே மிகவும் கூட்ட நெரிசலில் சிக்கிக் கொண்டார். இதையடுத்து எப்படியோ விஜயகாந்த் உடல் வைக்கப்பட்டுள்ள இடத்திற்கு வந்த அவர் அங்கு உருக்கமாக இருந்தார். விஜயகாந்தின் உடலை பார்த்ததுமே கண்ணீர் சிந்தினார்.
பின்னர் பிரேமலதா, அவருடைய மகன்கள் விஜய பிரபாகரன், சண்முக பாண்டியன் ஆகியோருக்கு ஆறுதல் தெரிவித்தார். பின்னர் அவர் வெளியேறிய போது கூட்ட நெரிசலில் கடுமையாக சிக்கினார். அவரை பலர் நசுக்கும் அளவுக்கு கூட்டம் இருந்தது. எப்படியோ அவரின் கார் அருகே சென்ற போது அங்கிருந்த ஒரு பச்சை சட்டை அணிந்த நபர் விஜய்யின் கன்னத்தை கிள்ளி தொடர்ந்து முத்தமிட்டவாறே இருந்தார்.
மேலும் விஜய் மீது யாரோ செருப்பை வீசிய சம்பவம் நடந்தது. அந்த கூட்டத்தில் இருந்த யாரோ ஒருவர் செருப்பை வீசினர், ஆனால் அது விஜய் மீது படவில்லை. அங்கிருந்த நபர் அந்த செருப்பை மீண்டும் வீசிய இடத்திற்கே எறிந்தார். இது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் அறிந்த பிரேமலதா மிகவும் வருந்தினாராம். இதுகுறித்து வீடியோ வெளியானதை அடுத்து விஜய் ரசிகர்களும் கொந்தளித்தனர்.
இதையடுத்து கோயம்பேடு காவல் நிலையத்தில் விஜய் மக்கள் இயக்கத்தினர் ஒரு புகாரை அளித்துள்ளனர். அந்த புகாரில் விஜய் மீது செருப்பு வீசிய சம்பவம் ரசிகர்களை கடுமையாக பாதித்துள்ளது. துக்க வீட்டில் இது போன்ற அநாகரிகமான செயலில் ஈடுபட்ட நபர் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த புகார் மனுவில் கேட்டுக் கொண்டனர்.












Click it and Unblock the Notifications