கொரோனா பரவும் அபாயம்... பத்தாம் வகுப்பு தேர்வை தள்ளிவைக்கக் கோரி பொதுநல வழக்கு
சென்னை: மாணவர்களுக்கு கொரோனா பரவும் அபாயம் உள்ளதால், 10ம் வகுப்பு தேர்வுகளை தள்ளி வைக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டுள்ளது.
கொரோனா பரவலை தடுக்க மார்ச் 25ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால், தமிழகத்தில் 10ம் வகுப்பு தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளன. தற்போது, ஜூன் 1ம் தேதி 10ம் வகுப்பு தேர்வுகள் நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதை எதிர்த்து, சென்னை சூளைமேட்டை சேர்ந்த வழக்கறிஞர் ஸ்டாலின் ராஜா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்று அதிகமாகி வருவதாகவும், 200 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், கிராமப்புறங்களில் இருந்து நகரங்களுக்கு படிக்க வரும் பெரும்பாலான மாணவர்களுக்கு போக்குவரத்து வசதி ஏற்படுத்த எந்த உத்தரவும் பிறப்பிக்காத நிலையில், தேர்வு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாகச் சுட்டிக் காட்டியுள்ளார்.
மேலும், தேர்வின் போது மாணவர்கள் சமூக இடைவெளியை பின்பற்றுவார்களா என்பது கேள்விக் குறி எனவும், எந்த முன்னெச்சரிக்கை ஏற்பாட்டையும் செய்யாமல் தேர்வை அறிவித்திருப்பது மாணவர்களுக்கு கொரோனா பரவும் வாய்ப்பை ஏற்படுத்திவிடும் எனவும் மனுவில் சுட்டிக் காட்டியுள்ளார்.
சிபிஎஸ்சி தேர்வுகள் ஜூலையில் நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளதாகவும், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இல்லை என்ற நிலை வரும்வரை 10ம் வகுப்பு தேர்வை நடத்த கூடாது என உத்தரவிடக் கோரியும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications