ஊரடங்கில் வீட்டு மின் கணக்கீட்டு முறை.. மின்வாரியம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி வழக்கு
சென்னை: ஊரடங்கு காலத்தில் வீட்டு உபயோக இணைப்புக்கான மின்சார அளவை கணக்கீடு செய்வது குறித்து மின்சார வாரியம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி வழக்கில் திங்கட்கிழமை தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கொரோனா பரவலை தடுக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக, மின் கணக்கீடு செய்யாததால், வீட்டு உபயோக தாழ்வழுத்த மின் நுகர்வோர், முந்தைய மாதத்திற்கு செலுத்திய கட்டணத்தின் அடிப்படையில் கட்டணம் செலுத்தலாம் எனவும், பின்னர் மின்சார கணக்கீடு செய்யும் போது, இரண்டு இரு மாதங்களுக்கும் சேர்த்து மின்சார பயன்பாடு கணக்கிட்டு, முந்தைய மாத கட்டணத்தின் அடிப்படையில் செலுத்தப்பட்ட தொகையை கழித்து விட்டு, மீத தொகைக்கு பில் செலுத்த வேண்டும் எனவும் மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
இந்த உத்தரவை எதிர்த்து தேசிய மக்கள் சக்திக் கட்சித் தலைவர் எம்.எல்.ரவி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அவர் தனது மனுவில், முன்பு பயன்படுத்தப்பட்ட மின்சாரத்தின் யூனிட் அளவில் கணக்கிடாமல், முந்தைய கட்டணத்தின் அடிப்படையில் கட்டணத்தை நிர்ணயிப்பதன் மூலம், 12 சதவீதம் முதல் 14 சதவீதம் வரை அதிக கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகச் சுட்டிக் காட்டியுள்ளார். இது, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் உத்தரவை மீறிய செயல் எனவும் புகார தெரிவித்துள்ளார்.
மருத்துவ படிப்பில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50% இட ஒதுக்கீடு கோரிய வழக்கு நாளை விசாரணை
மேலும், மின்சார வாரியத்தின் அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் எனவும், முந்தைய மின் அளவீட்டின் அடிப்படையில், முதல் இரு மாதங்களுக்கான கட்டணத்தை தனி 'பில்'லாகவும், மீத யூனிட்களை அடுத்த இரு மாதங்களுக்கான 'பில்'லாகவும் நிர்ணயித்து தனித்தனி பில்கள் தயாரிக்க உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.
நான்கு மாதங்களுக்கு சேர்த்து கட்டணம் நிர்ணயிப்பதால், 500 யூனிட்களுக்கும் குறைவாக மின்சாரம் பயன்படுத்தும் 96 சதவீத மக்கள் பாதிக்கப்படுவர்கள் எனவும், ஊரடங்கால் வேலைவாய்ப்பை இழந்து பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் அதிக கட்டணம் செலுத்த வேண்டி வரும் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கு நீதிபதி சுப்பையா மற்றும் நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது இந்த மனு தொடர்பாக வரும் திங்கட்கிழமை தமிழக அரசு பதிலளிக்குமாறு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.