சென்னையில் கமல்ஹாசன் கட்சி நிர்வாகி சினேகா மோகன் - ஆட்டோ டிரைவர் இடையே கைகலப்பு.. என்ன நடந்தது?
சென்னை: சென்னை மயிலாப்பூர் அருகே ஆட்டோ டிரைவரை காலணியால் தாக்கிய மக்கள் நீதி மய்யம் மகளிர் அணி நிர்வாகி சினேகா மோகன்தாஸ்தாஸ் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆபாசமாக பேசுதல், தாக்குதல் ஆகிய இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆட்டோ டிரைவருடனான வாக்குவாதத்தின் போது அவரை ஆபாசமாக பேசி காலணியால் தாக்கியதாக ஆட்டோ டிரைவர் கொடுத்த புகாரின் பேரில் மயிலாப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் மகளிர் அணி நிர்வாகியாக இருப்பவர் சினேகா மோகன்தாஸ் (வயது 32). இவர் நேற்று வாடகை ஆட்டோவில் வெளியே புறப்பட்டுள்ளார். அவருடன் அவரது தோழி ஒருவரும் பயணித்ததாக கூறப்படுகிறது. ஆட்டோவை பிரசாந்த் என்பவர் ஓட்டியதாக கூறப்படுகிறது.

ஆட்டோ டிரைவரை தாக்கிய சினேகா
இந்த நிலையில் ஆட்டோ டிரைவர் பிரசாந்த் ஆட்டோவை வேகமாகவும், தாறுமாறாகவும் இயக்கியதாக கூறப்படுகிறது. இது பற்றி ஆட்டோ டிரைவரிடம் சினேகா மோகன்தாஸ் கேட்டுள்ளார். ஏன் இப்படி செல்கிறீர்கள்.. மெதுவாக செல்லுங்கள் என்று கூறியதாக தெரிகிறது. அதற்கு அவர் தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது. இதில் ஆட்டோ டிரைவருக்கும் சினேகாவுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
தொடர்ந்து சினேகா ஆட்டோவின் சாவியை பிடித்து இழுக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் இருவரும் மாறி மாறி ஒருவரை ஒருவர் தாக்க தொடங்கியுள்ளனர். உடனே ஆட்டோவை சாலையின் ஓரமாக பிரசாந்த் நிறுத்தியுள்ளார். அப்போது சினேகாவை ஆட்டோவில் இருந்து கீழே இறங்குமாறு ஆட்டோ டிரைவர் கூறியுள்ளார்.
ஆனால் நான் ஏன் இறங்க வேண்டும் என்றும், ஏன் அவ்வாறு பேசினாய் என்றும் சினேகா அவரை திட்டி பேசினார். தொடர்ந்து ஆட்டோ டிரைவரை சினேகா தாக்கியுள்ளார். பதிலுக்கு அவரும் சினேகாவை தாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து சாலையில் சென்று கொண்டிருந்தவர்கள் அவர்களை சமாதானப்படுத்தினர்.
சினேகா மீது வழக்குப் பதிவு
இருவரும் ஒருவரை ஒருவர் திட்டிக்கொண்டே மாறி மாறி தாக்கிக்கொண்டனர். வாகன ஓட்டிகள் பலரும் அவர்களை சமாதானப்படுத்த முயற்சித்து கொண்டிருந்தனர். அப்போது ஆட்டோ சாவியை பிடுங்கிய சினேகா, காலில் இருந்து காலணியை கழற்றி ஆட்டோ டிரைவரை தாக்கினார். இதற்கிடையே சென்னை மயிலாப்பூர் போலீசார் அங்கு வந்து அவர்களிடம் விசாரித்தனர்.
அப்போது இருவரும் ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டினர். தொடர்ந்து ஆட்டோ டிரைவர் சினேகா மீது புகார் கொடுத்தார். அதன்பேரில் சென்னை மயிலாப்பூர் போலீசார் ஆபாசமாக பேசுதல், தாக்குதல் ஆகிய இரு பிரிவுகளின் கீழ் சினேகா மீது வழக்குப் பதிவு செய்தனர்.
ஆட்டோ டிரைவர் கைது
இதேபோன்று சினேகாவும் தன்னை ஆபாசமாக திட்டியதாகவும், தாக்கியதாகவும் புகார் கொடுத்துள்ளார். அதன்பேரில் ஆட்டோ டிரைவர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் பிரசாந்தை கைது செய்தனர். இது தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
முன்னதாக ஆட்டோ டிரைவர் மற்றும் சினேகா இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ளும் போது சாலையில் சென்ற சில தங்களது செல்போன்களில் வீடியோ எடுத்துள்ளனர். தற்போது இந்த வீடியோவானது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications