மோதல் முற்றுகிறதா?... ராமதாஸ் மீது வழக்கு தொடரப்படும்... திருமாவளவன் காட்டம்
சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சி மீது தொடர்ந்து அவதூறு பரப்பும் ராமதாஸ் மீது வழக்கு தொடரப்படும் என்று அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், சமூக வலைத்தளமான முகநூலில் பதிவிடப்பட்ட தவறான பதிவுகளால், கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே உள்ள குறவன்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த ராதிகா, அவருடை உறவினரும், காதலருமான விக்னேஷ் அடுத்தடுத்து தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் வேதனை அளிக்கிறது என்று கூறியுள்ள திருமாவளவன், விளக்கம் அளித்து சில விஷயங்களை குறிப்பிட்டுள்ளார்.
அதனைத் தொடர்ந்து, கட்சியை வலிந்து இணைத்து, வழக்கம் போல மீண்டும் மீண்டும் அவதூறு பரப்பும் சதி முயற்சியில் பாமக ஈடுபட்டுள்ளது என்று குற்றம்சாட்டியுள்ளார். மேலும், தனிநபர்களின் தனிப்பட்ட நட்புறவுகளுக்கோ அல்லது தனிப்பட்ட இன்னபிற நடவடிக்கைகளுக்கோ ஒரு இயக்கம் எப்படி பொறுப்பாக முடியும்? திட்டமிட்ட உள்நோக்கத்துடன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மீது வீண் பழிசுமத்துவது எந்தவகையில் ஞாயமாகும்? வேண்டுமென்றே அடித்தட்டில் கிடந்து உழலும் மக்களிடையே சாதியின் பெயரால் மோதலைத் தூண்டிவிட்டு, சமூகப் பதற்றத்தை உருவாக்குவதும் சட்டம்-ஒழுங்கு சிக்கலை ஏற்படுத்துவதும் தான் பாமகவின் திட்டமிட்ட சதி நோக்கமாக உள்ளது.
பாமகவின் இத்தகைய அரசியல் சதி நோக்கையும், சமூக விரோதப் போக்கையும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. தனி நபர்களின் தனிப்பட்ட பிரச்சினைகளோடு வேண்டுமென்றே விடுதலைச் சிறுத்தைகளை தொடர்புபடுத்தி ஆதாரமற்ற வகையில் அபாண்டமாக பழி சுமத்தி தொடர்ச்சியாக அவதூறு பரப்பி வருவது பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்களின் வாடிக்கையாக உள்ளது.
இது விடுதலை சிறுத்தைகளுக்கு எதிராக மட்டுமின்றி, அப்பாவி தலித் மக்களுக்கு எதிராகவும் அனைத்து சமூக மக்களிடையே கடும் வெறுப்பை விதைப்பதாக உள்ளது. மேலும், இது தலித்துகளுக்கு எதிரான சாதிவெறி யாட்டத்தைத் தூண்டுவதாகவும் உள்ளது. இந்த பெருந்தீங்கிலிருந்து சமூக நல்லிணக்கத்தை பாதுகாக்கும் வகையில் மருத்துவர் ராமதாஸ் அவர்கள் மீது விரைவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி வழக்கு தொடுக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.