பணம் தந்தால் பதவி.. ரூ.26 லட்சம் பெற்று மோசடி? தவெக மாவட்ட செயலாளர் மீது பகீர் புகார்!
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தில் பதவி வழங்குவதாக ரூ.26 லட்சம் பெற்று மோசடி செய்ததாகவும், தவெக மாவட்டச் செயலாளர் மீது புகார் எழுந்துள்ளது. சட்டசபை தேர்தல் நேரத்தில் தவெக மாவட்ட செயலாளர் மீது கட்சி நிர்வாகியின் கணவர் போலீசில் புகார் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தவெகவில் மகளிரணி பதவி வழங்குவதற்காக ரூ.26 லட்சம் பெற்று மோசடி செய்ததாக அக்கட்சியின் மதுரை தெற்கு மாவட்டச் செயலாளர் தங்கப்பாண்டி மீது ஷர்மிளா என்பவரின் கணவர் பாலாஜி, மதுரை மாநகர காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்து பாலாஜி கூறுகையில், தமிழக வெற்றிக் கழகத்தில் பதவி தருவதாக கூறி தங்கப்பாண்டி எங்களிடம் ஐ-போன், சோபா, பிரிண்டர் ஆகியவற்றை வாங்கி உள்ளார். தங்கப்பாண்டியின் மகன் சஞ்சய் ஜி-பே எண்ணிற்கு அவ்வப்போது பணமும் அனுப்பி வைக்கப்பட்டது, இதன் மொத்த மதிப்பு 10 லட்ச ரூபாய்.
மேலும், தொழில் முதலீடு செய்யலாம் என 16 லட்ச ரூபாயும் பெற்றுள்ளார். நிலத்தை அடமானம் வைத்து கொடுத்துள்ளதால் எங்கள் குடும்பம் கடன் பிரச்சனையில் சிக்கி தவிக்கிறது. இதனால் தான் என் மனைவி தற்கொலைக்கு முயன்றார். பணத்தை திரும்பக் கேட்டால் தர முடியாது என மிரட்டுகிறார்கள்.
தமிழக வெற்றிக் கழக மேடையில் நிர்வாகிகளை மேடையேற்ற வேண்டும் என்றால் தங்கப்பாண்டிக்கு தலா 10,000 ரூபாய் பணம் தர வேண்டும் என்றும் வசூல் செய்து வருகிறார்கள். இந்த விவகாரம் தொடர்பாக சி.டி.ஆர்.நிர்மல் குமார் என்னிடம் போனில் பேசி 'அடுத்த ஆட்சி நம்முடையதுதான், ஆட்சிக்கு வந்த பின்னர் அனைத்தையும் சரி செய்துவிடலாம், அதனால் பிரச்சனை எதும் செய்ய வேண்டாம்' எனக் கூறினார்.
காவல்துறையில் புகார் அளிக்க கூடாது. ஊடகத்தில் பேட்டி அளிக்கக் கூடாது என என்னை மிரட்டுகிறார்கள் என தவெக பெண் நிர்வாகியின் கணவர் பாலாஜி புகார் அளித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம், ஷர்மிளாவின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை, அரசியல் உள் நோக்கத்துடன் கூறப்பட்டவை என தங்கப்பாண்டி தெரிவித்துள்ளது எனத் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications