சென்னை- பெங்களூர் சாலையில்.. அடுத்தடுத்து விபத்து.. இப்படியும் நடக்குமா? அதிர்ந்த வாகன ஓட்டிகள்
சென்னை: சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே வந்த பூனை மீது மோதாமல் இருக்க காரை டிரைவர் திருப்பியதால், அந்த காருக்கு பின்னால் வந்த வாகனங்கள் அடுத்தடுத்து கார் மீது மோதி விபத்துக்குள்ளாகின. இந்த விபத்தில் காயமடைந்த லாரி, அரசு பஸ், கார் டிரைவர்கள் 3 பேர் உள்பட மொத்தம் 18 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை எப்போதும் பரபரப்பாக இருக்கக் கூடிய சாலைகளில் ஒன்றாக உள்ளது. சென்னையில் இருந்து பெங்களூருக்கு செல்லும் இந்த முக்கியமான வழித்தடத்தில் கார்களும், கனரக வாகனங்களும் என அணிவகுத்து செல்வதை பார்க்க முடியும்.

இரவு நேரங்களிலும் சாலையின் இருமார்க்கத்திலும் அரசு தனியார் பேருந்துகள், கார்கள், சரக்கு வாகனங்கள் என ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று கொண்டிருக்கின்றன. காஞ்சிபுரம், வேலூர் உள்ளிட்ட நகரங்களுக்கு செல்பவர்களும் இந்த சாலையை பயன்படுத்துவதால் எப்போதும் பிசியாகவே உள்ளது. இந்த நிலையில் தான், நேற்று இரவு இந்த நெடுஞ்சாலையில் கொனவட்டம் அருகே அடுத்தடுத்து மூன்று வாகனங்கள் மோதிக்கொண்டன.
முன்னால் சென்ற காரின் குறுக்கே தீடிரென பூனை வந்ததால், பூனை மீது மோதமால் இருக்க கார் டிரைவர் சட்டென காரை திருப்பியிருக்கிறார். இதனால் அடுத்தடுத்த வாகனங்கள் மோதிக்கொண்டுள்ளன. இந்த விபத்து குறித்த முழு விவரம் வருமாறு:-
வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு பேருந்து ஒன்று நேற்று இரவு தேவனம்பட்டு நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பஸ் சென்னை - பெங்களூர் நெடுஞ்சாலையில் கொனவட்டம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது முன்னால் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த லாரிக்கு முன்பாக கார் ஒன்று கொன்டிருந்தது.
இந்த நிலையில் காருக்கு முன்பு திடீரென பூனை குறுக்கே சென்றுள்ளது. இதனால் பூனை மீது மோதாமல் இருக்க பிரேக் பிடித்து டிரைவர் காரை திருப்பியுள்ளார். இதில் பின்னால் வந்து கொண்டிருந்த லாரி கார் மீது மோதியது. இதேபோல் லாரி மீது பின்னால் வந்துகொண்டிருந்த அரசு பஸ் மோதியது. பூனை மீது மோதாமல் இருக்க கார் டிரைவர் திருப்பியதில், லாரியும், அரசு பஸ்சும் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளாகின.
இந்த விபத்தில் கார், லாரி மற்றும் அரசு பேருந்தின் முன்பக்கம் சேதமடைந்தன. மேலும் 3 வாகனங்களில் இருந்தவர்களும் காயமடைந்தனர். விபத்து பற்றி அறிந்ததும் உடனடியாக போலீசார் அங்கு வந்தனர். அவர்கள் காயமடைந்தவர்களை மீட்டு உடனடியாக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கார் டிரைவர், லாரி டிரைவர், பஸ் டிரைவர் உள்பட 18 பேர் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து காரணமாக பெங்களூர்- சென்னை நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்துக்குள்ளான வாகனங்களின் கண்ணாடிகள் உடைந்து சாலை முழுவதும் சிதறிக்கிடந்தன. இவற்றை அப்புறப்படுத்திய பிறகு வாகன போக்குவரத்து சீரானது. சென்னை- பெங்களூர் நெடுஞ்சாலையில் பூனை குறுக்கே வந்ததால் அடுத்தடுத்து வாகனங்கள் விபத்துக்குள்ளான சம்பவம் வாகன ஓட்டிகள் இடையே பரபரப்பாக பேசப்பட்டது.












Click it and Unblock the Notifications