இரிடியம் மோசடி.. அதிமுக பிரமுகர் உட்பட 30 பேரை பிடித்து சிபிசிஐடி விசாரணை.. ரூ.3 லட்சம் பறிமுதல்!
சென்னை: இரிடியம் மோசடி தொடர்பாக தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் சிபிசிஐடி போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். 40 இடங்களில் சோதனை நடத்தி 30 பேரை பிடித்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ராணிப்பேட்டை அதிமுக பிரமுகர் மூர்த்தி என்பவர்து வீட்டில் சிபிசிஐடி நடத்திய சோதனையில், கணக்கில் வராத 3.19 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சீசனுக்கு ஏற்ப அவ்வப்போது அப்பாவி மக்களையும், குறைந்த காலத்தில் அதிக பணம் ஈட்ட விருப்பம் உள்ளவர்களையும் குறிவைத்து மோசடிகள் நடந்து வருகின்றன. ஈமு கோழி மோசடி, சிலை மோசடி, முதலீடு செய்தால் பல மடங்கு லாபம் தருவதாக கூறி மோசடி என டிசைன் டிசைனாக மோசடி சம்பவங்கள் நடந்து வருகின்றன. இரிடியம் மோசடி பல ஆண்டுகளாக அவ்வப்போது நடந்து வருகிறது.

இரிடியம் விற்பனை செய்து கோடிக்கணக்கான ரூபாய் ரிசர்வ் வங்கியில் வைத்திருப்பதாக நம்ப வைத்து மோசடிகள் நடைபெற்று வருகின்றன. ரிசர்வ் வங்கி மூலமாக இந்திய அரசிடம் இருந்து இரிடியம் மற்றும் தாமிரம் விற்பனைக்காக பல்லாயிரம் கோடி ரூபாய் பணம் பெறப்பட்டதாகவும் இந்தப் பணத்தை வெளியில் கொண்டு வருவதற்கு ரிசர்வ் வங்கிக்கு சேவைக் கட்டணம் செலுத்த வேண்டும் எனவும் சிலர் பொதுமக்களை நம்ப வைத்து ஏமாற்றி வருவதாக புகார்கள் எழுந்தன.
பணத்தைப் பெறுவதற்கு ரிசர்வ் வங்கி அதிகாரிகளுக்கு கமிஷன் தொகை கொடுக்க வேண்டும் எனவும் அவ்வாறு செலுத்தினால் அதிக வட்டியுடன் முதலீட்டுத் தொகை திரும்பக் கிடைக்கும் எனக் கூறி ஏமாற்றி வருவதாக கூறப்படுகிறது. ஒரு லட்சம் முதலீடு செய்தால் ஒரு கோடி ரூபாய் தருவோம் எனக் கூறி பலரிடம் பணம் வசூல் செய்து மோசடிகள் நடப்பதாக புகார்கள் வந்தன.
இதுதொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், தமிழ்நாட்டில் வேலூர், ராணிப்பேட்டை, திருச்சி, கரூர், நெல்லை உள்ளிட்ட 40 இடங்களில் சோதனை நடத்தி 30 பேரை பிடித்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக பிரமுகரான படியம்பாக்கம் மூர்த்தி என்பவரது வீட்டில் சிபிசிஐடி நடத்திய சோதனையில், கணக்கில் வராத 3.19 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications