தைலாபுரத்தில் ட்விஸ்ட்.. ராமதாஸ் - அன்புமணி சமரசத்திற்குப் பின்னால் இருக்கும் மாஸ்டர் பிளான்!
சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் பாமக தலைவர் அன்புமணி இடையிலான கருத்து வேறுபாடு முடிவுக்கு வந்துள்ளது. இதனால் பாமக தொண்டர்களும், நிர்வாகிகளும் உற்சாகத்தில் இருக்கின்றனர். இருப்பினும் திடீரென ராமதாஸ் மற்றும் அன்புமணி ஆகிய இரு தரப்பும் இணைந்ததற்கு பின்னணியில் பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன.
பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையில் சுமார் 2 ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வந்தது. ஒரு கட்டத்தில் அன்புமணியை தலைவர் பதவியில் இருந்து நீக்கி ராமதாஸும், ராமதாஸ் வயது முதிர்வு காரணமாக வேறு சிலரால் கட்டுப்படுத்தப்படுகிறார் என்றும் விமர்சித்தனர். அன்புமணிக்கு தலைமைக்கான பண்பே இல்லை என்று ராமதாஸ் விளாசி தள்ளினார்.

ஒரு கட்டத்தில் அன்புமணி பாமகவை கைப்பற்றிய சூழலில், ராமதாஸ் தனியாக தனது ஆதரவாளர்களுடன் தனி இயக்கம் கண்டார். சட்டசபைத் தேர்தலில் அன்புமணி பாமக தரப்பு 4 தொகுதிகளில் வென்றது. பல்வேறு தொகுதிகளில் ராமதாஸ் களமிறக்கிய வேட்பாளர்கள் பாமகவின் வெற்றியை தடுத்தனர். இது பாமக தொண்டர்களுக்கு சோகத்தை அளித்தது.
இருந்தாலும் சட்டசபைத் தேர்தலுக்கு பின் அன்புமணி மற்றும் ராமதாஸ் இடையிலான கருத்து வேறுபாடு சுமூக முடிவை எட்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதற்கேற்ப ராமதாஸ் - சரஸ்வதியின் 61வது திருமண நாளினை முன்னிட்டு அன்புமணி தனது குடும்பத்துடன் தைலாபுரம் வந்தார். அவரது வருகையை ராமதாஸ் தரப்பும் எதிர்பார்த்தே காத்திருந்தது.
அதனால் தான் அன்புமணிக்கு ஆரத்தி எடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது. இதன்பின் ராமதாஸ், அன்புமணியை பார்த்து நெகிழ்ச்சியில் ஆனந்த கண்ணீர் விட, அங்கிருந்த குடும்பத்தினரும் நெகிழ்ச்சி அடைந்தனர். இதன்பின் அனைவரும் ராமதாஸ் காலில் விழுந்து ஆசி பெற்றனர். இந்த சந்திப்பு நிகழ்ந்ததற்கு பின்னணியில் சில அரசியல் காரணங்களும் சொல்லப்படுகின்றன.
சட்டசபைத் தேர்தலுக்கு பின் பாமகவுக்கான டிமாண்ட் அதிகரித்துள்ளது. விஜய் அலையில் கூட பாமக தனது வாக்கு வங்கியை காப்பாற்றி கொண்டுள்ளது. இருந்தாலும் ராமதாஸ் தனியாக இருப்பது அன்புமணிக்கு சேதாரத்தை உருவாக்கும். இதனை இருவரும் அறிந்தே வைத்திருக்கின்றனர். உள்ளாட்சித் தேர்தல் நெருங்கிவிட்ட சூழலில், இணைப்பை தாமதப்படுத்த வேண்டாம் என்று இரு தரப்பும் கருதி இருக்கிறது.
அதுமட்டுமல்லாமல் ராமதாஸ் அணியில் இருந்து பலரும் அன்புமணி பக்கம் தாவ தயாராகி இருக்கிறார்கள். இதனை ராமதாஸ் தரப்பும் அறிந்தே வைத்திருக்கிறது. இதனால் ராமதாஸ் தரப்பு இறங்கி வர, அன்புமணி உடனே சம்மதம் தெரிவித்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல் பாமக வன்னியர் சங்க பொறுப்பை அன்புமணி வசம் ஒப்படைக்கவும் ராமதாஸ் சம்மதித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.












Click it and Unblock the Notifications