100 நாட்களுக்கு முன் காணாமல் போன முகிலன் வழக்கில் துப்பு கிடைத்துள்ளது.. சிபிசிஐடி பரபரப்பு தகவல்
சென்னை: காணாமல் போன முகிலன் வழக்கில் துப்பு கிடைத்துள்ளது என சிபிசிஐடி போலீஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த பிப்ரவரி மாதம் 15-ஆம் தேதி சமூக ஆர்வலர் முகிலன் செய்தியாளர்களை சந்தித்து ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக சில ஆதாரங்களை வெளியிட்டார். இதையடுத்து மதுரை செல்வதாக கூறிவிட்டு, எழும்பூர் ரயில்வே ஸ்டேஷனுக்கு சென்றார். ஆனால், அவர் மதுரை வந்தடையவேயில்லை. ரயிலில் வைத்தே அவர் கடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் முகிலன் காணாமல் போன விவகாரத்தில் ஹென்றி டிபேன் என்பவர் ஆட்கொணர்வு மனு ஒன்றினை ஐகோர்ட்டில் தாக்கல் செய்திருந்தார். இதன் மீதான விசாரணை கடந்த மார்ச் 4-ஆம் தேதி நடைபெற்றது.
அப்போது இந்த வழக்கு தொடர்பாக 148 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாகவும் சிபிசிஐடி போலீஸார் தெரிவித்தனர். இந்த நிலையில் இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்றைய தினம் விசாரணைக்கு வந்தது.
அப்போது சிபிசிஐடி போலீஸார் கூறுகையில் முகிலன் வழக்கில் துப்பு கிடைத்துள்ளது. முகிலன் குறித்த தகவலை வெளியே சொன்னால் விசாரணை பாதிக்கப்படும். முகிலன் வழக்கில் போதுமான முன்னேற்றம் உள்ளது என சிபிசிஐடி போலீஸ் தெரிவித்தது. ஆட்கொணர்வு வழக்கை 3 வாரங்களுக்கு உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.












Click it and Unblock the Notifications