பி.இ, அரசு கலைகல்லூரிகளில் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு..இடங்கள் அதிகரிப்பு - பொன்முடி
சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியாகி 5 நாட்கள் வரை கலை மற்றும் அறிவியல், பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.
சென்னை: தமிழகத்தில் உள்ள பொறியியல், அரசு கலைக்கல்லூரிகளில் சேருவதற்காக மாணவர்கள் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார். சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியாகி 5 நாட்கள் வரை கலை மற்றும் அறிவியல், பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
Recommended Video
தமிழகத்தில் கடந்த 20 ஆம் தேதி பிளஸ் 2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. தேர்வு முடிவு வெளியான அதே நாளில் இளநிலை பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்ப பதிவு தொடங்கியது. பி.இ.,பி.டெக்., உள்ளிட்ட படிப்புகளுக்கான விண்ணப்பத்தை மாணவர்கள் http:/www.tneaonline.org என்ற இணையதளத்தில் பெற்றுக்கொள்ளலாம்.

அதே போல், மாணவர்கள் சொந்தமாகவோ அல்லது பள்ளிகள், அரசின் இலவச மையங்கள் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம். தமிழகம் முழுவதும் 110 இலவச மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஜூலை 19 ஆம் தேதி வரை மாணவர்கள் அசல் சான்றிதழ் மற்றும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜூலை 22 ஆம் தேதி சம வாய்ப்பு எண்ணும், ஜூலை 20 முதல் ஜூலை 31 ஆம் தேதி வரை சேவை மையம் வாயிலாக சான்றிதழ் சரிபார்ப்பும் நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து ஆகஸ்ட் 8 ஆம் தேதி தர வரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு, பின்னர் கலந்தாய்வு தொடங்கும். ஆகஸ்ட் 9 முதல் 14 ஆம் தேதி வரை மாணவர்கள் சேவை மையம் வாயிலாக குறைகளை சரிசெய்து கொள்ளலாம்.
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கடந்த 22ஆம் தேதி முதல் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு தொடங்கியது. ஆன்லைன் மூலமாக www.tngasa.in என்கிற இணையதள பக்கத்தில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.
12ம் வகுப்பு தேர்ச்சியடைந்த மாணவர்கள், தமிழ்நாட்டில் உள்ள 163 அரசு கலை, அறிவியல் கல்லுரிகளில் சேர, ஜூன் 22 முதல் ஜூலை 7ம் தேதி வரை www.tngasa.in, www/tngasa.org என்ற இணையதள முகவரிகளில் விண்ணப்பிக்கலாம் என உயர்க்கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்த நிலையில் சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் மாணவர்கள் விண்ணப்பம் செய்வதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, பொறியியல், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேருவதற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்று தெரியவில்லை.
சிபிஎஸ்இ தேர்வு முடிவு வெளியான பிறகு மாணவர்கள் விண்ணப்பிக்க 5 நாட்கள் வரை கால அவகாசம் வழங்கப்படுகிறது. 163 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பிக்க நேற்று அவகாசம் முடிந்த நிலையில் அவகாசம் நீட்டிப்பு வழங்கியுள்ளோம். அரசு மற்றும் கலைக் கல்லூரிகளில் இதுவரை 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர்.
பொறியியல் கல்லூரிகளில் சேர வரும் 17ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. கல்லூரிகளில் சேர ஆன்லைன் கலந்தாய்வு நடைபெறும்.கல்லூரிகளில் தரத்தை உயர்த்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் கூறினார். 1000 ரூபாய் உதவித்தொகை பெற இதுவரை 2 லட்சம் மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர் என்றும் அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications