ஒரு மாதத்திற்குள் தனியார் பள்ளி வாகனங்களில் சிசிடிவி, ஜிபிஎஸ் பொருத்த வேண்டும்.. ஐகோர்ட் உத்தரவு
சென்னை: அடுத்து வரும் 4 வாரங்களுக்குள் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி வாகனங்களிலும் ஜிபிஎஸ் மற்றும் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கோவையில் பள்ளி வாகனத்தில் சென்ற மாணவி ஒருவர் வாகன ஓட்டுநர் மற்றும் உதவியாளரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இதுபோன்ற சம்பவங்களை தடுக்க பள்ளி வாகனங்களில் ஜிபிஎஸ் மற்றும் சிசிடிவி பொருத்தக் கோரி கோபிகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார்
அதில் குழந்தைகள் மீதான பாலியல் கொடுமை உள்ளிட்டவற்ற தடுக்க பள்ளி வாகனங்களில் ஜிபிஎஸ், சிசிடிவி பொருத்த தமிழக அரசுக்கு மனு அளித்தேன் ஆனால் இதுவரை தமது கோரிக்கைக்கு, தமிழக அரசு உரிய பதில் அளிக்கவில்லை. எனவே மாணவர்களின் நலன் கருதி அவர்களின் பாதுகாப்பான பயணத்தை பெற்றோர்கள், இணையதளம் மூலம் கண்காணிக்க வகை செய்ய வேண்டும்
இதற்காக தமிழக அரசுக்கு உாிய உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். கடந்த விசாரணையின் போது மனுதாரரின் கோரிக்கை குறித்து விளக்கமளிக்க பள்ளிக்கல்வித்துறை செயலாளருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.
இந்நிலையில் இது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, பள்ளி வாகனங்களில் சிசிடிவி கேமராக்களும், ஜிபிஎஸ் கருவிகளும் பொருத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக பள்ளி கல்வித்துறை கூறியது.
மேலும் மேற்கண்டவை எல்லா நேரங்களிலும் சீராக இயங்கும் நிலையில் இருப்பதை உறுதி செய்ய பள்ளி நிர்வாகங்களை அறிவுறுத்தியுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. தவிர ஜிபிஎஸ் மற்றும் சிசிடிவி கருவிகளின் மூலம், பள்ளி வாகனங்களை கண்காணிக்க தனியார் பள்ளிகளில் கட்டுப்பாட்டு அறை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு பள்ளிக்கல்வித்துறை உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்தது. இந்த அறிக்கையை ஏற்ற உயர்நீதிமன்றம் அனைத்து தனியார் பள்ளி வாகனங்களிலும் சிசிடிவி மற்றும் ஜிபிஎஸ் கருவிகளை ஒரு மாதத்திற்குள் பொருத்தி முடிக்க உத்தரவிட்டு வழக்கையும் முடித்து வைத்தது.












Click it and Unblock the Notifications