பட்டப்பகலில் நடுரோட்டில் பைனான்சியர் வெட்டிக்கொலை.. வெளியான அதிர்ச்சி சிசிடிவி காட்சி - 2 பேர் சரண்!
சென்னை: சென்னை ஷெனாய் நகரில் நேற்று முன் தினம் பட்டப்பகலில் நடுரோட்டில் பைனான்சியர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
அதில், இருசக்கர வாகனங்களில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் ஆறுமுகத்தை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் செல்லும் காட்சி பதிவாகியுள்ளது.
பைனான்சியர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் இரண்டு பேர் கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் சரணடைந்தனர். மற்ற 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

பைனான்சியர்
சென்னை, சேத்துப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம், இவர், வாகனங்களுக்கு பைனான்ஸ் செய்வது, வட்டிக்கு பணம் கொடுப்பது போன்ற தொழிலில் ஈடுபட்டு வந்தார். இவரது அலுவலகம் ஷெனாய் நகரில் உள்ள ஏழாவது தெருவில் இயங்கி வருகிறது.
ஆறுமுகம் சேத்துப்பட்டில் இருந்து நேற்று முன்தினம் பகல் 1:30 மணிக்கு தன் இருசக்கர வாகனத்தில் ஷெனாய் நகரில் உள்ள அலுவலகத்திற்கு சென்று கொண்டிருந்தார்.

பட்டப்பகலில் கொலை
ஆறுமுகம் ஷெனாய் நகர் மெட்ரோ அருகில் சென்றபோது பின்னால் இருசக்கர வாகனங்களில் வந்த கும்பல் ஆறுமுகத்தை வழிமறித்து அரிவாளால் வெட்டினர். அவர்களிடம் இருந்து தப்பி ஓடிய ஆறுமுகத்தை, அந்த கும்பல் விரட்டிச் சென்று, சாலை மையத் தடுப்பின் அருகில் வைத்து, கை, தலை, முகம் என சரமாரியாக வெட்டிவிட்டு இருசக்கர வாகனங்களில் தப்பினர். பட்டப்பகலில் நடந்த இந்தச் சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

விசாரணை
ரத்த வெள்ளத்தில் சாலையில் விழுந்த பைனான்சியர் ஆறுமுகத்தை சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஆறுமுகம் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். அமைந்தகரை போலீசார் இந்த கொலை குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ரவுடி
முதற்கட்ட விசாரணையில், கொலை செய்யப்பட்ட ஆறுமுகத்தின் மீது சேத்துப்பட்டு, கீழ்ப்பாக்கம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் ஐந்து வழக்குகள் இருப்பது தெரியவந்தது. அதேபோல், ரவுடிகளாக வலம் வரும் தட்சிணா மற்றும் காக்காதோப்பு பாலாஜி ஆகியோரின் கூட்டாளியாகவும் ஆறுமுகம் இருந்தது தெரியவந்தது.
முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா அல்லது பணம் கொடுக்கல், வாங்கல் தகராறில் கொலை செய்யப்பட்டாரா ஆகிய கோணங்களில் போலீசார் விசாரிக்கின்றனர்.

வீடியோ
ஆறுமுகம் வெட்டிக் கொல்லப்பட்டு உயிருக்குப் போராடும் வீடியோ காட்சிகளை, அவ்வழியாக காரில் சென்ற நபர் ஒருவர் படம் பிடித்துள்ளார். அந்த காட்சி சமூக வலைதளங்களில் பரவியது.
இந்நிலையில், ஆறுமுகத்தை இருசக்கர வாகனத்தில் வந்த கும்பல் விரட்டிச் சென்று வெட்டிவிட்டுத் தப்பிச் செல்லும் சிசிடிவி காட்சியும் வெளியாகி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. அதில், அந்த 6 பேரும் ஆறுமுகத்தை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் செல்லும் காட்சி பதிவாகியுள்ளது.

2 பேர் சரண்
சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் குற்றவாளிகளை தேடிக்கொண்டிருக்கும் நிலையில், நேற்று கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் சந்திரசேகர், ரோஹித் ராஜ் ஆகிய 2 பேர் சரணடைந்தனர். மேலும் இந்த விவகாரத்தில் தொடர்புடைய 4 பேரையும் போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.
கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில், இரண்டு ரவுடி கும்பல்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக கொலை நிகழ்ந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications