அதிமுக ஆபிஸில் எடப்பாடி.. பறந்து வந்து கன்னத்தில் ஓங்கி விழுந்த போன்! யாருயா அது.. ஆவேசமான ர.ர.க்கள்
சென்னை : அதிமுக தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஐடி விங் ஆலோசனைக் கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டு நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார். முன்னதாக எல்.இ.டி பதாகைகளை எடப்பாடி திறந்து வைத்த போது அவர் மீது செல்போன் வந்து விழ யாருயா அது என தொண்டர்கள் ஆவேசமாகினர்.
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் அதிமுக தலைமையில் தமிழகத்தில் அமைக்கப்பட்ட தேர்தல் கூட்டணி படுதோல்வியை சந்தித்தது. ஒரு இடத்தில் கூட அந்த கட்சி வெற்றி பெற முடியாமல் போனது. சில இடங்களில் டெபாசிட் இழந்ததோடு மூன்றாம் இடத்துக்கும் தள்ளப்பட்டது.

அதிமுக பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக பல அணிகளாகவும் கட்சிகளாகவும் சிதறுண்டு கிடக்கிறது, எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்றது முதல் அந்தக் கட்சி சந்தித்த அனைத்து தேர்தல்களிலும் படுதோல்வியை சந்தித்திருக்கிறது.
எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக இருந்த போது நடைபெற்ற இடைத்தேர்தல், அதற்குப் பிறகு மக்களவைத் தேர்தல், 2021 சட்டமன்றத் தேர்தல், நகர்ப்புற, ஊரக உள்ளாட்சித் தேர்தல்கள், ஈரோடு இடைத்தேர்தல் என அனைத்து தேர்தல்களிலும் அதிமுக படுதோல்வியை சந்தித்தது. 2024 மக்களவைத் தேர்தலிலும் 40க்கு 40 என தமிழகம் புதுச்சேரியில் அதிமுக மண்ணை கவ்வியது கட்சி தொண்டர்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.
அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட சசிகலா, டிடிவி தினகரன், ஓபிஎஸ் ஆகியோர் தனித்தனி அணிகளாகவும் கட்சிகளாகவும் செயல்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் தொண்டர்கள் எடப்பாடி பழனிச்சாமியை புறக்கணித்து விட்டனர், அதிமுக தலைமை மாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது என ஓ.பன்னீர்செல்வம் கூறியிருக்கிறார். அதேபோல இத்தனை நாள் கட்சிக்காக தான் ஒதுங்கி இருந்தேன் இனிமேல் பொறுத்துக் கொள்ள முடியாது என சசிகலாவும் அறிக்கை விட அதிமுகவில் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது.
ஆனால் யாருக்கும் கட்சியில் இடம் இல்லை என திட்டவட்டமாக தெரிவித்து இருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. மேலும் பல மாவட்டங்களில் அணிகளாக செயல்படும் நிர்வாகிகளை அழைத்து அவர்களுக்கும் பதவி கொடுத்து தனது தலைமையை தொடர ஏற்பாடுகள் செய்துள்ள நிலையில், 2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலையும் தனது தலைமையிலேயே எதிர்கொள்ள ஏற்பாடு செய்து வருகிறார். இதற்காக பல்வேறு அணி நிர்வாகிகள் அடுத்தடுத்து ஆலோசனை கூட்டங்கள் நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை மேற்கொண்டார். முன்னதாக கட்சியின் தலைமை அலுவலகத்தில் இருக்கும் எம்ஜிஆர் ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அவர், தகவல் தொழில்நுட்ப பிரிவின் சார்பில் எல்இடி டிஜிட்டல் விளம்பர பலகையை திறந்து வைத்தார்.
இந்த பலகை நிரந்தரமாக அதிமுக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டிருக்கும். அதில் ஐடி விங் சார்பில் அதிமுகவினுடைய சாதனைகளை காட்சிப்படுத்தக்கூடிய வகையிலும் ஜெயலலிதா எம்ஜிஆர் எடப்பாடி பழனிச்சாமியின் நிகழ்ச்சிகள் பேச்சு உள்ளிட்டவை ஒளிபரப்பப்பட உள்ளது. அதுமட்டுமல்லாமல் இபிஎஸ் 2024 என்கிற ஹாஷ்டேகுடன் கூடிய விளம்பர பலகையையும் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார்.
தொடர்ந்து கட்சியின் நிர்வாகிகள் உடன் ஆலோசனை கூட்டத்தில் அவர் பங்கேற்றார். கூட்டத்தில் அதிமுகவில் அடுத்த 18 மாதங்களுக்கான நிர்வாகிகள் செயல்பாடுகள், ஐடி விங் நிர்வாகிகளின் செயல் திட்டங்கள், அதிமுகவின் சாதனைகளை மக்களுக்கு தெரியப்படுத்துவது, அதிமுக போராட்டங்களை மக்களிடம் கொண்டு செல்வது என பல்வேறு பொறுப்புகளில் இருக்கும் நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை வழங்கினார்.
முன்னதாக ஐடி விங் சார்பாக எல்இடி டிஜிட்டல் பதாகையை எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார். அப்போது திடீரென எங்கிருந்தோ பறந்து வந்த செல்போன் ஒன்று அவரது கன்னத்தில் பலமாக தாக்கியது. இதனால் எடப்பாடி பழனிச்சாமி சற்று அதிர்ச்சி அடைந்தாலும் செல்போனை தட்டி விட்டு சிரித்த முகமாக காணப்பட்டார். அதே நேரத்தில் அவருக்கு அருகில் இருந்த நத்தம் விஸ்வநாதன், திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து யாருயா அது என நிர்வாகிகள் ஆவேசமாகக் கேட்ட நிலையில் செல்போன் தெரியாமல் புகைப்படம் எடுக்கும் போது விழுந்ததாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications