உஷார்.. சார்ஜ் ஏறிய செல்போன்.. ஈரக்கையோடு எடுத்து பேசிய அரசு ஊழியர் பலி.. மின்சாரம் தாக்கிய சோகம்
சென்னை: சென்னை அருகே ஆவடியில் குளித்துவிட்டு வந்து ஈரக்கையோடு சார்ஜ் ஏறிக்கொண்டு இருந்த செல்போனை எடுத்து பேசிய மத்திய அரசு ஊழியர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக இறந்த சோகம் நடந்துள்ளது. இது எப்படி நடந்தது என்பது பற்றிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
தற்போதைய சூழலில் செல்போன் பயன்பாடு என்பது அனைவருக்கும் தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது. இதனால் அனைவரும் செல்போன் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் தான் செல்போனை வைத்து சில அசம்பாவித சம்பவங்கள் நடந்து வருகின்றன.
இந்நிலையில் சார்ஜ் ஏற்றும்போது செல்போன் வெடித்தல், செல்போன் வெடித்து உயிரிழக்கும் சம்பவங்களும் அவ்வப்போது நடைபெற்று வருகிறது. அதுபோல் தான் சென்னை அருகே ஒரு சம்பவம் நடந்துள்ளது.

மத்திய அரசு ஊழியர்
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி கவுரிபேட்டை பகுதியை சேர்ந்தவர் பால்பாண்டி (வயது 59). இவர் ஆவடியில் உள்ள மத்திய அரசுக்கு சொந்தமான சி வி ஆர் டிஇ தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆவடி ஜே பி எஸ்டேட்டில் ஒரு பழைய வீட்டை வாங்கி உள்ளார். அந்த வீட்டில் சீரமைப்பு பணியுடன் வர்ணம் பூசும் பணி நடைபெற்று வருகிறது.

சார்ஜ் ஏற்றியபடி செல்போனில் பேச்ச
சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வேலையாட்கள் வரவில்லை. இதனால் பால்பாண்டி மட்டும் வீட்டில் தனியாக வர்ணம் பூசி வந்துள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் செல்போனுக்கு சார்ஜர் போட்டு விட்டு குளிக்க சென்றார். குளித்துவிட்டு வந்து சார்ஜ் ஏறும்போதே செல்போனில் பேசியுள்ளதாக கூறப்படுகிறது.

மின்சாரம் பாய்ந்து பலி
அப்போது எதிர்பாராத விதமாக சார்ஜர் வயரில் இருந்து மின்சாரம் பாய்ந்துள்ளது. இதனால் அவர் பரிதாபமாக இறந்து போனார். இதுபற்றி வீட்டின் அருகே உள்ளவர்கள் இன்று காலை காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பெயரில் ஆவடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

போலீஸ் விசாரணை
வீட்டின் முதல் மாடியில் சுவற்றில் சாய்ந்தபடி அவர் இறந்து இருந்தார். போலீசார் உடலை கைப்பற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications