குட்கா முறைகேடு: சிபிஐக்கு ‘கிரீன் சிக்னல்’ காட்டிய மத்திய அரசு! மேலும் 8 பேருக்கு சிக்கல்.. போச்சே!
சென்னை: குட்கா முறைகேடு தொடர்பாக 8 அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தொடர மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக கூறி, அதுதொடர்பான கடிதத்தை மூடி முத்திரையிட்ட உறையில் சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்துள்ளது.
தமிழ்நாட்டில் தடையை மீறி, குட்கா பொருள்கள் விற்றது தொடர்பாக, குட்கா குடோன் உரிமையாளர்கள் மாதவராவ், சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி செந்தில்முருகன், மத்திய கலால் துறை அதிகாரி நவநீத கிருஷ்ண பாண்டியன், சுகாதாரத்துறை அதிகாரி சிவக்குமார் ஆகிய 6 பேர் மீது சிபிஐ, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

இந்நிலையில் முன்னாள் அமைச்சர்கள் பி.வி.ரமணா, சி.விஜய பாஸ்கர், முன்னாள் டிஜிபி டி.கே.ராஜேந்திரன், சென்னை முன்னாள் போலீஸ் ஆணையர் ஜார்ஜ், மாநில அரசு அதிகரிகள் உள்ளிட்ட 11 பேருக்கு எதிராக கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
அதில் பல்வேறு தவறுகள் இருப்பதால் அதனை திருத்தம் செய்து முழுமையாக தாக்கல் செய்ய விசாரணை அதிகாரிக்கு உத்தரவிட்ட சிபிஐ நீதிமன்றம், கூடுதல் குற்றப்பத்திரிகையை சிபிஐக்கு திரும்ப அளித்தது.
இந்த சூழ்நிலையில், தமிழக காவல் துறை முன்னாள் அதிகாரிகளுக்கு எதிராக விசாரணை நடத்த மத்திய அரசு அனுமதி கோரப்பட்டிருந்தது. இதன் காரணமாக வழக்கு விசாரணை தள்ளிவைக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் இந்த வழக்கு சிபிஐ நீதிமன்ற நீதிபதி மலர் வாலன்டினா முன் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, எட்டு பேருக்கு எதிராக வழக்கு தொடர மத்திய அரசு அனுமதியளித்தது தொடர்பான கடிதத்தை மூடி முத்திரையிட்ட உறையில் சிபிஐ தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, வழக்கின் விசாரணை ஆகஸ்ட் 16ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications