இமயமலை உயரத்திற்கு ஈடான ஆழம்! மனிதனை ஆழ்கடலுக்கு அனுப்பும் சமுத்ராயன் மிஷன்!வெளியான முக்கிய அப்டேட்
சென்னை: ஆழ்கடல் ஆராய்ச்சியை மேம்படுத்தும் விதமாக, சுமார் 6000 மீ ஆழத்தில் மனிதர்களை அனுப்பி ஆய்வு செய்யும் 'சமுத்ரயான்' திட்டம் எப்போது செயல்படுத்தப்படும் என்பது குறித்த அறிவிப்பை மத்திய அமைச்சர் கிரன் ரிஜிஜூ வெளியிட்டுள்ளார்.
ஆழ்கடல் ஆய்வு: உலகமே தற்போது மாற்று எரிசக்தி பயன்பாட்டை நோக்கி நகர்ந்துக்கொண்டிருக்கிறது. அதாவது பெட்ரோல், டீசல் போன்ற புதை படிம எரிபொருளுக்கு பதிலாக புதுப்பிக்கத் தக்க எரிசக்தியை நோக்கி உலக நாடுகள் சென்றுகொண்டிருக்கின்றன. ஆனாலும், புதைபடிம எரிபொருளின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டுதான் இருக்கிறது.

இப்படி இருக்கையில், ஆழ்கடல் பரப்பில் படிந்துள்ள விஷயங்கள் குறித்து ஆய்வு செய்ய மத்திய அரசு தீவிரமாக முயன்று வருகிறது. இந்த ஆய்வில் புதைபடிம எரிபொருள் கிடைக்க கூட வாய்ப்பிருக்கிறது. அந்த வகையில் இந்த ஆய்வு இந்தியாவுக்கு மிக முக்கியமானதாகும்.
சமுத்ராயன் திட்டம்: ஆழ்கடல் பரப்பில் சுமார் 6000 மீ, அதாவது 6 கி.மீ ஆழத்தில் ஆய்வை மேற்கொள்வதுதான் சமுத்ராயன் திட்டத்தின் நோக்கம். இந்த திட்டத்திற்கான சிறிய வகை நீர்மூழ்கி கப்பலை தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனம் உருவாக்கியுள்ளது. இந்த ஆய்வின் மூலம் கடல் பரப்பில் உள்ள புதைபடிம எரிபொருள், ஆழ்கடல் உயிரினங்கள் குறித்து பல்வேறு விஷயங்கள் வெளி உலகிற்கு தெரிய வரும். இந்தியாவை சுற்றியுள்ள கடல்களில் ஏற்படும் மாற்றங்களையும் இதன் மூலம் தெரிந்துக்கொள்ள முடியும்.
எப்போது சாத்தியம்?: இந்த ஆராய்ச்சி எப்போது நடத்தப்படும் என்பது குறித்து மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ சமீபத்தில் சில தகவல்களை கூறியிருந்தார். அவர் கூறியதாவது, “இந்த திட்டம் 2025ம் ஆண்டுக்குள் சாத்தியப்படும் என்று நினைக்கிறேன். 6000 மீட்டருக்கும் அதிகமான ஆழத்தில் நமது பயிற்சி பெற்ற வீரர்களை அனுப்ப முடியும் என்று உறுதியாக நான் நம்புகிறேன். இதற்கான பணிகள் கடந்த 2021ம் ஆண்டு தொடங்கப்பட்டன. இந்த ஆய்வில் மூன்று வீரர்கள் ஆழ்கடலுக்கு செல்வார்கள்” என்று கூறியுள்ளார்.

இந்தியா: ஆழ்கடல் ஆய்வுக்காக Matsya6000 எனும் சிறிய வடிவிலான நீர்மூழ்கி கப்பல் தயாரிக்கப்பட்டிருக்கிறது. இது 12 மணி நேரம் வரை நீருக்கடியில் இருக்கும். அவசர சூழல் ஏற்பட்டால் 96 மணி நேரம் வரை கூட நீருக்கு அடியில் இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இதுவரை, அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரான்ஸ் மற்றும் ஜப்பான் போன்ற நாடுகள் ஆழ்கடல் குழுவினர் பணியை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளன. 2025ல் இந்தியா இந்த ஆய்வை வெற்றிகரமாக முடித்தால், மேற்குறிப்பிட்ட நாடுகளின் பட்டியலில் நமது நாடும் இடம் பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.











Click it and Unblock the Notifications