யுபிஎஸ்சி வினாத்தாள்களை பிராந்திய மொழிகளில் மொழிமாற்றம் செய்யலாமே.. சென்னை ஐகோர்ட் யோசனை
சென்னை: செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வுகளின் கேள்வித்தாள்களை மாநில மொழிகளில் வழங்குவது தொடர்பாக பரிசீலிக்கலாம் என மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஆலோசனை தெரிவித்துள்ளது.
நமது நாட்டில் மிகவும் கவுரமிக்க பணிகளாக ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற குடிமை பணிகள் கருதப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் நாடு முழுக்க பல லட்சம் பேர் இந்தத் தேர்வை எழுதினாலும் சில நூறு பேர் மட்டுமே தேர்வாவார்கள்.

இந்தாண்டு கூட சமீபத்தில் தான் யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியாகின. அதில் நாடு முழுவதும் இருந்து மொத்தமாக 1016 பேர் மட்டுமே தேர்ச்சியடைந்து இருந்தனர். அந்தளவுக்கு யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் கடினமாகவே இருக்கும்.
தேர்வுகள்: இந்த குடிமை பணிகளுக்கு யுபிஎஸ்சி மூலம் முதலில் முதல்நிலை தேர்வு நடத்தப்படும். அதில் தேர்ச்சி பெறுவோர் பின்பு முதல்நிலை தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள். பிறகு இறுதியாக நேர்காணல் நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். அந்தளவுக்கு ரொம்பவே கடினமான தேர்வு முறையாக இந்த சிவில் சர்வீஸ் தேர்வு முறை இருக்கும்.
ஐ ஏ.எஸ். - ஐ.பி.எஸ் போன்ற சிவில் சர்வீசஸ் தேர்வுகளை அனைத்து தரப்பு மாணவர்களும் எழுத ஏதுவாக ஏற்கனவே மாநில மொழிகளில் தேர்வு எழுத அனுமதி தரப்பட்டுள்ளது. மாநில மொழிகளில் தேர்வாளர்கள் விடைகளை எழுதலாம் என்ற போதிலும் கேள்வித்தாள்கள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே வழங்கப்படும்.
பிராந்திய மொழிகள்: இதற்கிடையே அரசியல் சாசனத்தின் எட்டாவது அட்டவணையில் உள்ள 22 மாநில மொழிகளிலும் இந்த தேர்வுகளுக்கான கேள்வித்தாள்களை வழங்க உத்தரவிட வேண்டும் என போட்டித் தேர்வுகளில் பங்கேற்போருக்கு பயிற்சி அளிக்கும் மதுரையைச் சேர்ந்த எஸ்.பாலமுருகன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
யோசனை: இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி சத்தியநாராயண பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்த போது, மத்திய அரசுத் தரப்பில் காலஅவகாசம் கோரப்பட்டது. இதை ஏற்று, வழக்கின் விசாரணையை ஜூன் 28ஆம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதிகள், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் தற்போது எளிதாக மொழிபெயர்ப்பு செய்யலாம் என யோசனை தெரிவித்தனர்.
இந்த மொழி பெயர்ப்பு நூறு சதவீதம் சரியாக இல்லாவிட்டாலும், 70 சதவீதம் வரை சரியாக இருப்பதாகக் குறிப்பிட்ட நீதிபதிகள், அவற்றை மனிதர்களைப் பயன்படுத்தி சரி செய்யலாம் எனவும், இது சம்பந்தமாக நேர்மறையாக மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications