கஜா புயல் பாதிப்பை ஆய்வு செய்ய.. மத்திய குழு சென்னை வந்தது
Recommended Video

சென்னை: கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளைப் பார்வையிடுவதற்காக மத்திய குழு இன்று இரவு சென்னை வந்தது.
கஜா புயலால் டெல்டா மாவட்ட மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து வாடுகிறார்கள். நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய மாவடங்கள் பேரழிவை சந்தித்துள்ளன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு தவிர பொது மக்களும் உதவி செய்து வருகிறார்கள்.

உடனடி நிவாரண பணிகளுக்காக தமிழக அரசு ரூ. 1,000 கோடி ஒதுக்கியுள்ளது. புயலால் பாதிக்கப்பட்ட சில பகுதிகளை பார்வையிட்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி நிவாரண பணிகளை மேற்கொள்ள நிதி கேட்டு டெல்லிக்கு சென்று பிரதமர் மோடியை நேற்று சந்தித்து பேசினார்.
புயலால் பல்வேறு மாவட்டங்கள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதால் சீரமைப்பு பணிகளுக்காக ரூ. 15 ஆயிரம் கோடி நிதி வேண்டும் என்று அவர் மோடியிடம் தெரிவித்தார். மேலும் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட மத்திய குழுவை தமிழகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார். அவரின் கோரிக்கையை ஏற்று மத்திய குழுவை தமிழகத்திற்கு அனுப்பி வைக்கிறார் மோடி.
இன்று இரவு இந்தக் குழு சென்னை வந்தது. மத்திய உள்துறை இணைச் செயலாளர் டேணியல் ரிச்சர்ட் தலைமையிலான இக்குழுவில் உறுப்பினர்களாக கவுல், வாஸ்தவா, ஹர்ஷா, இளவரசன், மாணிக் சந்திரா, வந்தனா சிங்கால் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இந்தக் குழு நாளை தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்துப் பேசவுள்ளது. அதைத் தொடர்ந்து இவர்கள் ஆய்வுப் பணியைத் தொடங்குகின்றனர். முதலில் திருச்சி சென்று அங்கிருந்து புதுக்கோட்டை செல்லும் இக்குழு அங்கு ஆய்வு மேற்கொள்ளும். அதைத் தொடர்ந்து நாகை, திருவாரூர், தஞ்சாவூர் உள்ளிட்ட கஜா புயல் பாதித்த மாவட்டங்களுக்கு சென்று ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளனர்.
அதன் பின்னர் சென்னை திரும்பி தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பின்னர் டெல்லி திரும்புவார்கள். பிறகு மத்திய அரசிடம் ஆய்வு அறிக்கையை அளிப்பர். அதன் பேரில் மத்திய அரசு நிதியுதவியை அறிவிக்கும் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications