மெட்ரோ எல்லாம் சான்ஸ் இல்லை.. பஸ் பயன்படுத்துங்க.. கோவை, மதுரைக்கு மத்திய அரசு சொன்னது என்ன?
கோயம்புத்தூர்: கோவை மற்றும் மதுரைக்கான மெட்ரோ ரயில் திட்ட முன்மொழிவுகளை மத்திய அரசு நிராகரித்துள்ளது. 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இந்த இரு நகரங்களிலும் மெட்ரோ ரயில் திட்டத்திற்குத் தேவையான 20 லட்சம் மக்கள் தொகை இல்லை என்பதே இதற்குக் காரணமாகக் கூறப்படுகிறது. இதற்கான சான்றுகள் புகைப்படத்தில் இணைக்கப்பட்டு உள்ளது.
வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம், நவம்பர் 14, 2025 அன்று வெளியிட்ட தகவலில், 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி கோவையின் மக்கள் தொகை 15.84 லட்சம் என்றும், மதுரையின் மக்கள் தொகை 15 லட்சம் என்றும் குறிப்பிட்டுள்ளது.
பேருந்து பயன்படுத்துங்கள் - விரைவு பேருந்து போக்குவரத்து அமைப்பு
2017 ஆம் ஆண்டு மெட்ரோ ரயில் கொள்கையின்படி, ஒரு நகரத்தில் மெட்ரோ ரயில் திட்டத்தைத் தொடங்க, அதன் மக்கள் தொகை 20 லட்சம் அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டும். மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட விரிவான போக்குவரத்து திட்டத்தின்படி, மதுரைக்கு விரைவு பேருந்து போக்குவரத்து அமைப்பு (BRTS) பொருத்தமானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"மெட்ரோ திட்டங்கள் அதிக செலவு கொண்டவை என்பதால், நீண்டகால நிலைத்தன்மை கருதி கவனமாகத் திட்டமிடப்பட வேண்டும். இந்த நகரங்களுக்கு, மலிவு விலையிலான மற்ற நகர்ப்புற போக்குவரத்து அமைப்புகளான வலுவான பேருந்து சேவை மற்றும் BRTS ஆகியவை பொருத்தமானதாக இருக்கும்," என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
"மேற்கண்ட காரணங்களால், கோவை மெட்ரோ ரயில் திட்ட மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கான விரிவான திட்ட அறிக்கைகள் திருப்பி அனுப்பப்படுகின்றன," என்றும் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநில அரசு அதிகாரி ஒருவர், மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மாற்றாக பிற போக்குவரத்து முறைகளை ஆராயுமாறு மத்திய அரசு பரிந்துரைத்துள்ளதாகத் தெரிவித்தார். "எப்படியும், நாங்கள் எங்கள் தரப்பை நியாயப்படுத்துவோம்" என்றும் அவர் கூறினார்.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம்
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கையை ஜூலை 2023 இல் சமர்ப்பித்தது. 2010 இல் கோவையை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ஏற்ற நகரங்களில் ஒன்றாக மத்திய அரசு அடையாளம் காட்டியது. "இப்போது, 15 ஆண்டுகளுக்குப் பிறகு நிராகரிக்கப்பட்டுள்ளது. இது மிகவும் ஏமாற்றமளிக்கிறது மற்றும் மனவேதனை அளிக்கிறது," என்று அவர் தெரிவித்தார்.
2011 க்குப் பிறகு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை என்றும், கோவை மாவட்டத்தின் வாக்காளர் எண்ணிக்கை 30 லட்சம். எனவே, உண்மையான மக்கள் தொகை குறைந்தபட்சம் 40 லட்சமாக இருக்கும் என்று விளக்கங்கள் கொடுக்கப்படுகின்றன.
சிறிய நகரங்கள்
ஜெய்ப்பூர், கொச்சி, நாக்பூர் போன்ற கோவைக்கு இணையான இரண்டாம் நிலை நகரங்களில் மெட்ரோ ரயில் இயங்கி வருவதையும் என்று புகார்கள் வைக்கப்படுகின்றன. பொதுப் போக்குவரத்தில் நாங்கள் 10 ஆண்டுகள் பின்னோக்கித் தள்ளப்படுவோம். பிரதமர் இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும், மத்திய அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும், என்றும் கோரிக்கைகள் வைக்கப்படுகின்றன.
முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்
இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வைத்துள்ள, 'கோயில் நகர்' மதுரைக்கும், 'தென்னிந்திய மான்செஸ்டர்' கோவைக்கும் "NO METRO" என நிராகரித்துள்ளது ஒன்றிய பா.ஜ.க. அரசு!
அனைவருக்கும் பொதுவானதாகச் செயல்படுவதுதான் அரசுக்கான இலக்கணம். அதற்கு மாறாக, பா.ஜ.க.வைத் தமிழ்நாட்டு மக்கள் நிராகரிப்பதற்காக இப்படி பழிவாங்குவது கீழ்மையான போக்கு. பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் உள்ள சிறிய இரண்டாம் நிலை மாநகரங்களுக்குக் கூட மெட்ரோ ரயிலுக்கான ஒப்புதல் வழங்கிவிட்டு, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களைப் புறக்கணிப்பது அழகல்ல. கூட்டாட்சிக் கருத்தியலை இப்படி சிதைப்பதைச் சுயமரியாதைமிக்க மண்ணான தமிழ்நாடு ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது.
சென்னை மெட்ரோ பணிகளைத் தாமதப்படுத்தி முடக்க நடந்த முயற்சிகளை முறியடித்து முன்னேறினோம்! அதேபோல மதுரை & கோவையிலும் வருங்கால வளர்ச்சிக்கு இன்றியமையாத தேவையான மெட்ரோ இரயிலைக் கொண்டு வருவோம்! , என்று கூறி உள்ளார்.












Click it and Unblock the Notifications