தமிழகத்திற்கு வந்தே பாரத் வந்த ஓரிரு நாளிலேயேவா.. சந்தேகம் கிளப்பும் உதயநிதி ஸ்டாலின்
சென்னை: குறைக்கப்பட வேண்டியது வந்தே பாரத் ரயிலின் பயணக் கட்டணமே தவிர சாமானியர்கள் பயன்படுத்தும் மற்ற ரயில்களின் வேகத்தை அல்ல என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் #VandheBharat ரயில் அறிமுகப்படுத்தப்பட்ட ஓரிரு நாட்களிலேயே சாமானிய மக்கள் பயணிக்கக்கூடிய பொதிகை, பல்லவன், நெல்லை உள்ளிட்ட எக்ஸ்பிரஸ் ரயில்களின் வேகம் குறைக்கப்பட்டுள்ளது பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது.

பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயப்படுத்துவது அல்லது முற்றிலும் சிதைப்பது எனும் ஒன்றிய அரசின் தொடர் நடவடிக்கையின் மற்றொரு வடிவமாகவே மக்கள் இதனை பார்க்கின்றனர்.
குறைக்கப்பட வேண்டியது வந்தே பாரத் ரயிலின் பயணக்கட்டணமே தவிர, சாமானிய மக்கள் பயணிக்கின்ற மற்ற ரயில்களின் வேகத்தை அல்ல என்பதை ஒன்றிய அரசு புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அண்மையில் சென்னை- நெல்லை இடையே வந்தே பாரத் ரயிலானது நீண்ட எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இயக்கப்பட்டது.
இந்த ரயிலில் டிக்கெட் கட்டணம் ஏசி சேர் காரில் உணவுக்கு 364 ரூபாய் உட்பட 1,665 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. சிறப்பு பெட்டியில் உணவுக்கு 419 ரூபாய் உட்பட 3,055 ரூபாய் கட்டணமாக வசூல் செய்யப்படுகிறது. ஒரு வேளை உணவு வேண்டாமென்றால் No food என்ற option ஐ தேர்வு செய்ய வேண்டும். வைகை உள்ளிட்ட எக்ஸ்பிரஸ் ரயிலை ஒப்பிடுகையில் வந்தே பாரத் ரயில் கட்டணம் பன்மடங்கு உள்ளது. இதனால் ஏழை எளிய நடுத்தர மக்கள் வந்தே பாரத் ரயிலை பயன்படுத்துவார்களா என்ற சந்தேகம் இருக்கிறது.
இந்த ரயிலில் கட்டணம் அதிகமாக இருந்தாலும் பயண நேரம் குறைவு என்பதால் பலர் இதில் பயணிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் வந்தே பாரத் ரயிலின் பயன்பாட்டை அதிகரிக்கும் நோக்கில் மற்ற எக்ஸ்பிரஸ் ரயில்களின் வேகத்தை குறைக்கும் முயற்சி நடைபெறுவதாக பயணிகள் குற்றம்சாட்டுகிறார்கள்.
சென்னை - நெல்லை வந்தே பாரத் ரயிலில் பயணிகள் அதிகளவில் வர வேண்டும் என்பதற்காக மற்ற எக்ஸ்பிரஸ் ரயில்களான வைகை, பாண்டியன், பொதிகை, கன்னியாகுமரி, முத்துநகர், நெல்லை உள்ளிட்ட ரயில்களின் வேகத்தை குறைப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ்நாட்டில் #VandheBharat ரயில் அறிமுகப்படுத்தப்பட்ட ஓரிரு நாட்களிலேயே சாமானிய மக்கள் பயணிக்கக்கூடிய பொதிகை, பல்லவன், நெல்லை உள்ளிட்ட எக்ஸ்பிரஸ் ரயில்களின் வேகம் குறைக்கப்பட்டுள்ளது பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது.
— Udhay (@Udhaystalin) September 30, 2023
பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயப்படுத்துவது அல்லது…
அது போல் எக்ஸ்பிரஸ் ரயில்களின் நேரமும் மாற்றியமைக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நாளை முதல் மதுரை செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் ரயில் அரை மணி நேரம் முன்னதாகவே சென்னையிலிருந்து புறப்படும் என சொல்லப்பட்டுள்ளது. இதுகுறித்து பயணிகள் கூறுகையில் வந்தே பாரத் ரயிலில் அவ்வளவு கட்டணம் கொடுத்து ஏழை மக்களால் செல்ல முடியாது.
பேருந்தில் கூட எங்களால் கட்டணம் செலுத்த முடியாது என்பதால்தான் ரயிலில் குறைந்த கட்டணத்தில் ஊர்களுக்கு செல்கிறோம். தற்போது வந்தே பாரத்துக்காக இந்த எக்ஸ்பிரஸ் ரயில்களின் வேகத்தை குறைப்பது என்ன நியாயம் என்கிறார்கள். மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு பலர் தங்கள் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications