"இந்த" 8 மாவட்டத்துக்காரரா நீங்க.. அப்போ குடை, ரெயின் கோட்டுடன் வெளியே கிளம்புங்க! கனமழை வார்னிங்
தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
சென்னை: தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த டிசம்பர் முதல் வாரத்தில் வந்த புயலுடன் முடிவுக்கு வந்தது. அதன்பிறகு அந்த அளவுக்கு மழையை பரவலாக கொடுக்கவில்லை.
இதனால் தற்போது பெரும்பாலான பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவுகிறது. ஆயினும் பனியின் தாக்கம் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் காணப்படுகிறது. அது போல் சில இடங்களில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் லேசானது முதல் மிதமான மழையும் பெய்து வருகிறது.

தென்கிழக்கு வங்கக் கடல்
இந்த நிலையில் தென் கிழக்கு வங்கக் கடல் மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதிகளில் நேற்று முன் தினம் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாக அதே இடத்தில் நீடித்து வருகிறது.

வடமேற்கு திசை
தொடர்ந்து மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தென் மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் இன்று வலுவடைகிறது. இதைத் தொடர்ந்து நாளை மறுநாள் இலங்கை கடற்பகுதிகளில் சென்றடையும். இதன் காரணமாக தமிழ்நாடு, புதுவையில் இன்றும் நாளையும் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.

தென்மாவட்டங்கள்
நாளை மறுதினம் தென் மாவட்டங்களில் அனேக இடங்களிலும் வடமாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்காலில் சில இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும். தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் , தூத்துக்குடி ஆகிய 8 மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யும்.

அனேக இடங்கள்
வியாழக்கிழமை தென் மாவட்டங்களில் அனேக இடங்களிலும், வட மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் சில இடங்களிலும் இடி மின்னலுடன் மிதமான மழையும், தூத்துக்குடி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை
மீனவர்களுக்கு எச்சரிக்கை இலங்கை கடற்கரையையொட்டிய தென்மேற்கு வங்க கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென் கிழக்கு வங்க கடல் பகுதிகளில் இன்றும், தென்மேற்கு வங்க கடல், தென் தமிழக கடலோர பகுதிகள், மன்னார்வளைகுடா, குமரி கடல் பகுதிகளில் நாளையும் சூறாவளி காற்று மணிக்கு 45 கி.மீ. முதல் 65 கி.மீ. வரையிலான வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications