உஷார் மக்களே..இரண்டு நாட்களுக்கு மழை வெளுத்து வாங்கப்போகுது.. இந்த லிஸ்டில் உங்க ஊர் இருக்கா பாருங்க?
தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னை: தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று நீலகிரி, கோவை, திருப்பூர், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, திண்டுக்கல், கரூர், புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
தமிழகத்தில் அக்னி நட்சத்திர காலம் முடிவுக்கு வந்தும் பல ஊர்களில் பகல் நேரங்களில் வெயில் சுட்டெரித்து வருகிறது. மாலை நேரங்களில் வெப்பச்சலனம் காரணமாக பலத்த மழை பெய் வருகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் புதுக்கோட்டை மாவட்டம் பெருங்கல்லூரில் 6 செமீ மழை பதிவாகியுள்ளது. திருச்சி ஆதனக்கோட்டை , குழித்துறை, களியல் ஆகிய ஊர்களில் தலா 5 செமீ மழை பதிவாகியுள்ளது. நத்தம், ஓட்டன்சத்திரம், திருச்சி நகரம் தலா 4 செமீ மழை பதிவாகியுள்ளது.

கனமழைக்கு வாய்ப்பு
வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோவை, திருப்பூர், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, திண்டுக்கல், கரூர், புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

ஜூன் 3 வரை மழை
நாளைய தினம் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. ஜூன் 1 முதல் 3ஆம் தேதி வரைக்கும் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையில் சுட்டெரிக்கும் வெயில்
சென்னையை பொறுத்தவரைக்கும் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 39-40 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கு எச்சரிக்கை
இன்றும் நாளையும் தென் கிழக்கு அரபிக்கடல், கேரளா மற்றும் இலட்சத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். குமரிக்கடல், மன்னார் வளைகுடா மற்றும் தென்தமிழக கடலோரப்பகுதிகளில் பலத்தக்காற்று தென்மேற்கு திசையிலிருந்து மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.












Click it and Unblock the Notifications