வானிலை மையம் குட் நியூஸ் - தமிழகத்தில் 5 நாட்களுக்கு மிதமான மழை- சென்னையிலும் லைட்டா மழை!
சென்னை: ஆந்திர கடலோரப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையின் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தென்மேற்கு பருவ மழையால், கடந்த சில மாதங்களாக கனமழை கொட்டி தீர்த்தது. தென்மேற்கு பருவமழை காலம் முடிந்த பின்னரும், சென்னை உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது.
தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், கடந்த சில தினங்களாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக, சென்னையில் மாலை நேரங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன் ஆங்காங்கே சில இடங்களில் மழை பெய்து வருகிறது.
பெண்கள் அரசியலமைப்பு சட்டத்தை படிக்க வேண்டும்.. அறிவுரை கூறிய பேராசிரியர் உ.பியில் டிஸ்மிஸ்!
கடந்த 24 மணி நேரத்தில்
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கிருஷ்ணகிரி மாவட்டம் தளி, தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், நாமக்கல் மாவட்டம் ராசிபுரம், சேலம் மாவட்டம் சங்கரிதுர்கம் ஆகிய பகுதிகளில் தலா 2 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இதேபோல், நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம், புதுச்சத்திரம், சேலம் மாவட்டம் எடப்பாடி, கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை, திருவண்ணாமலை செய்யார், கிருஷ்ணகிரி மாவட்டம் பாரூர், காஞ்சிபுரம், பென்னாகரம், பார்வூட், பந்தலூர் ஆகிய பகுதிகளில் தலா 1 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
வானிலை அறிவிப்பு
ஆந்திர கடலோரப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில், இன்றும், நாளையும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
6-ம் தேதி வரை மழை நீடிக்கும்
ஆந்திர கடலோரப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, வரும் 4-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் லேசான மழை
சென்னையை பொறுத்தவரையில், அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலையாக 32 முதல் 33 டிகிரி செல்சியஸ் என்ற அளவிலும், குறைந்தபட்ச வெப்பநிலையாக 26 முதல் 27 டிகிரி செல்சியஸ் என்ற அளவிலும் இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலையாக 33 முதல் 34 டிகிரி செல்சியஸ் என்ற அளவிலும், குறைந்தபட்ச வெப்பநிலையாக 26 முதல் 27 டிகிரி செல்சியஸ் என்ற அளவிலும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை
ஆந்திர கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல், தென் மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென் கிழக்கு வங்கக்கடல், குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக கடலோரப்பகுதிகளில் இன்று முதல் வரும் 5-ம் தேதி வரை, சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். எனவே, மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.