தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களுக்கு கனமழை.. டெல்டா மாவட்டங்களுக்கும் குட் நியூஸ்..!
தமிழகத்தில் 3 நாளைக்கு தொடர்ந்து மழைக்கு வாய்ப்பு என அறிவிக்கப்பட்டுள்ளது
சென்னை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தின் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. சேலம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளது.
Recommended Video
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே வட கிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் மழை பொழிவு இருந்து கொண்டே இருக்கிறது.
பல்வேறு மாவட்டங்களில் ஏரிகள், அணைகள் நிரம்பி கொண்டிருக்கின்றன.. இந்த மழையானது தொடர்ந்து ஆங்காங்கே நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல்களை வெளியிட்டு வருகிறது.
இந்நிலையில், சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

மிதமான மழை
மத்திய மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய ஆந்திர கடலோர பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி(5.8 கி.மீ., உயரம் வரை) காரணமாக சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, நாமக்கல், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யலாம்.

கனமழை
இன்று அதாவது 6ம் தேதி, நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.

சென்னை
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 28 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியசை ஒட்டி இருக்கும்... அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 29 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியசை ஒட்டி இருக்கும்.

அரபிக்கடல்
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வருகிற நவ.,9 ம் தேதி ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. மத்திய மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஆந்திர கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ., வேகத்திலும் இடை இடையே 60 கி.மீ., வேகத்திலும் வீசக்கூடும். கேரளா, கர்நாடக கடலோர பகுதிகள் மற்றும் லட்சத்தீவு, தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ., வேகத்தில் வீச வாய்ப்பு உள்ளது.

காற்று வீசும்
நாளை 7-ம் தேதி, தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் கர்நாடக கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ., வேகத்திலும் வீசக்கூடும். இதனால், மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் புவியரசன் தெரிவித்துள்ளார். அதேபோல, இன்றும் நாளையும் நீலகிரி, கோவை, ஈரோடு சேலம் உள்ளிட்ட மாவட்டங்களிலும், வரும் 8, 9 ஆகிய தேதிகளில் தென்மாவட்டங்கள், மற்றும் டெல்டா மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications