எங்க ஆளுநர் தமிழிசை எப்படி?.. திமுக முகாமில் விசாரித்த ராவ் &கோ..!
சென்னை: தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை எப்படிப்பட்ட குணநலனுடையவர் என சந்திரசேகர் ராவ் தரப்பில் இருந்து திமுக முகாமில் விசாரிக்கப்பட்டதாம்.
தெலுங்கானா ஆளுநராக தமிழிசை விரைவில் பதவியேற்க உள்ள நிலையில் அவரை பற்றிய முழு விவரத்தை அலசி ஆராய்ந்து கையில் வைத்துள்ளாராம் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதியின் தலைவரும், அம்மாநிலம் முதல்வருமான சந்திரசேகர் ராவ்.
நேற்றுவரை தெலுங்கானா ஆளுநராக இருந்த இ.எல்.நரசிம்மனால் இதுவரை எந்த நெருக்கடியும் ராவ் அரசுக்கு ஏற்பட்டதில்லை. அவருண்டு, ஆளுநர் மாளிகை உண்டு என தனது பதவிக்காலத்தை நிறைவு செய்துள்ளார் நரசிம்மன்.
காங்கிரஸுக்கு குட்பை சொல்லும் ஜோதிராதித்ய சிந்தியா- தனிக்கட்சியா? பாஜகவா?
புதிதாக ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள தமிழிசை அரசுக்கு இடையூறு செய்யும் வகையில், ஆய்வு அது இது என சுற்றுப்பயணம் செய்தால் எப்படி எதிர்கொள்வது என நேற்றிலிருந்து ஐதராபாத்தில் விவாதிக்கப்பட்டு வருகிறதாம். ஏற்கனவே தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி ஆகியோரின் ஆய்வுப்பணிகளை ஆதரித்து பேட்டி அளித்தவர் தமிழிசை என்பதால், இவரும் அவர்களைப் போல் புறப்பட்டு விடுவாரோ என அஞ்சுகிறாராம் சந்திரசேகர ராவ்.
தமிழிசையை பற்றி திமுக சகாக்களிடம் ராவ் அண்ட் கோ விசாரித்ததற்கு, பாசிட்டிவான பதில் தரப்பட்டதாம். பாரம்பரியமிக்க அரசியல் குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால் அச்சப்படத் தேவையில்லை என்றும், நல்ல மனம் கொண்டவர் எனவும் குட் சர்டிஃபிகேட் அளிக்கப்பட்டதாம். ஆனால் கட்சிக்காக அவ்வப்போது எதையாவது ஒன்றை பேசுவார் என்றும், அதனை பெரிதாக எடுத்துக்கொள்ளத் தேவையில்லை எனவும் கூறப்பட்டதாம்.