நிலவில் அசத்தும் சந்திரயான் 3.. 2 இலக்கு வெற்றி.. இன்னும் 1 மட்டுமே பாக்கி.. இஸ்ரோ சொன்ன செம தகவல்
சென்னை: நிலவின் தென்துருவத்தில் சந்திரயான் 3 விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக இறங்கியது. இதையடுத்து ரோவர் வாகனமும் லேண்டரில் இருந்து வெளியேறி ஆய்வு செய்து வரும் நிலையில் திட்டத்தின் 2 இலக்குகள் வெற்றி பெற்றுள்ளது எனவும், இன்னும் ஒரு இலக்கு மட்மே பாக்கி இருப்பதாகவும் இஸ்ரோ சூப்பரான தகவலை தெரிவித்துள்ளது.
நிலவின் தென்துருவ ஆராய்ச்சிக்காக சந்திரயான் 3 விண்கலம் கடந்த மாதம் 14ம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ராக்கெட் ஏவிதளத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது. உந்துவிசை கலன், விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவர் உள்ளிட்டவை ராக்கெட் மூலம் விண்ணுக்கு சென்றது.

உந்து விசை கலன் புவிவட்டபாதையை சுற்றி நிலவின் சுற்றுவட்டபாதையில் நுழைந்தது. இதையடுத்து உந்துவிசை கலனில் இருந்து பிரிந்த விக்ரம் லேண்டர் நிலவை நோக்கி பயணித்தது. இந்த வேளையில் சந்திரயான் 2 ஆர்ப்பிட்டருடன் அது தொடர்பையும் ஏற்படுத்தியது.
இதையடுத்து கடந்த 23ம் தேதி நாடே எதிர்பார்த்த அந்த பெருமையான விஷயம் நடந்தது. அதாவது அன்றைய தினம் மாலை 6.04 மணிக்கு நிலவின் தென்துருவத்தில் விக்ரம் லேண்டர் சாப்ட் லேண்டிங் முறையில் தரையிறங்கியது. கடந்த சந்திரயான் 2 திட்டத்தில் விக்ரம் லேண்டர் விழுந்து நொறுங்கிய நிலையில் இந்த முறை இஸ்ரோ விஞ்ஞானிகள் அந்த முயற்சியில் வெற்றி கண்டு இந்தியாவுக்கு பெருமை சேர்த்து தந்தனர்.
இதையடுத்து அடுத்த 4 மணிநேரத்தில் விக்ரம் லேண்டரில் இருந்து பிரக்யான் ரோவர் வாகனம் சாய்தளம் வழியாக வெளியேறிய நிலவில் கால்பதித்தது. இதையடுத்து விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் ஆகியவை அதிநவீன தொழில்நுட்ப கேமராக்களுடன் நிலவை படம்பிடித்து இஸ்ரோவுக்கு அனுப்பி வருகின்றன. அதோடு விக்ரம் லேண்டரில் இருந்து ரோவர் வெளியேறிய வீடியோ, நிலவில் ஊர்ந்து செல்லும் வீடியோக்களை இஸ்ரோ தொடர்ந்து வெளியிட்டு வருகிறது.
மேலும் தற்போதைய சூழலில் விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் ஆகியவை திட்டமிட்டப்படி சிறப்பாக செயல்பட்டு வருவதாக இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் இன்று மாலையில் சந்திரயான் 3 திட்டத்தின் 3 இலக்குகள் குறித்தும், அதில் 2 வெற்றி பெற்றுள்ளது எனவும் இஸ்ரோ முக்கிய தகவலை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக இஸ்ரோ தனது ட்விட்டர் பக்கத்தில், ‛‛சந்திரயான் 3 என்பது முக்கிய 3 பணிகளை நோக்கமாக கொண்டது. முதல் நோக்கமான நிலவின் மேற்பரப்பில் விக்ரம் லேண்டரை சாப்ட் லேண்டிங் முறையில் தரையிறக்குவது. இது வெற்றி பெற்றுள்ளது. 2வது நோக்கம் என்பது நிலவில் ரோவர் வாகனம் பயணத்தை தொடங்குவது. இதுவும் வெற்றி பெற்றுள்ளது எனக்கூறி ‛டிக்' அடிக்கப்பட்டுள்ளது.
3வது நோக்கம் என்பது நிலவில் அறிவியல் சார்ந்த ஆராய்ச்சிகளை மேற்கொள்வது. இந்த ஆராய்ச்சிகள் தற்போது நடத்தப்பட்டு வருகிறது. அனைத்து கருவிகளும் பிரச்சனைகள் இன்றி செயல்பட்டு வருகின்றன'' என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அனைத்து கருவிகளும் பிரச்சனைகள் இன்றி செயல்படுவதால் நிலவின் தென்துருவத்தில் நடத்தப்பட வேண்டிய ஆய்வுகளும் பிரச்சனையும் இன்றி திட்டமிட்டப்படி 14 நாட்களும் நடக்கும் என விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications